13 பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு ரூ.22,915 கோடி முதலீடு

13 பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு ரூ.22,915 கோடி முதலீடு
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளில் ரூ.22,915 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐஓபி உள்ளிட்ட 13 வங்கிகளில் இந்த தொகை முதலீடு செய்யப்படும். இதன் மூலம் இந்த வங்கிகள் சந்தையில் நிதி திரட்டுவது எளிதாக இருக்கும்.

நடப்பு நிதி ஆண்டில் செய்யப்படும் முதல் கட்ட முதலீடு இது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தகட்ட நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட தொகையில் 75 சதவீதம் இப்போது முதலீடு செய்யப்படும். வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிப்பது மற்றும் சந்தையில் நிதி திரட்டுவதற்கு வசதியாக இப்போது முதலீடு செய்யப்படும். மீதமுள்ள தொகை பிறகு முதலீடு செய்யப்படும். தவிர மீதமுள்ள தொகை செயல்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். டெபாசிட் வளர்ச்சி விகிதம், கடன் வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட செயல்பாடுகளை பொறுத்து மீதமுள்ள முதலீடு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட ரூ.22,915 கோடியில் அதிகபட்சமாக எஸ்பிஐ-யில் ரூ.7,575 கோடி முதலீடு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.3,101 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ. 2,816 கோடி), பேங்க் ஆப் இந்தியா (ரூ.1,784 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (1,729 கோடி), சிண்டிகேட் வங்கி (ரூ. 1,034 கோடி), யூகோ வங்கி (1,033 கோடி), கனரா வங்கி (ரூ.997 கோடி), யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா (ரூ.810 கோடி), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (ரூ.721 கோடி), கார்ப்பரேஷன் வங்கி (ரூ.677), தேனா வங்கி (ரூ.594 கோடி) மற்றும் அலாகாபாத் வங்கிக்கு 44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனால் பொதுத்துறை வங்கிப்பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்தன. எஸ்பிஐ பங்கு 0.37%, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்கு 1.27 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

கடந்த பட்ஜெட்டின் போது நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு 25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கூடுதல் நிதி தேவைப்பட்டால் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திரதனுஷ் திட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 4 ஆண்டுகளில் ரூ.70,000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 2015-16, 2016-17 ஆகிய நிதி ஆண்டுகளில் தலா ரூ.25,000 கோடியும், அடுத்த இரு நிதி ஆண்டுகளில் தலா ரூ.10,000 கோடியும் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in