

நாட்டின் வளர்ச்சிக்கு சரியான தலைமை அவசியம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடந்த பிக்கி கருத்தரங்கில் தொழில் அதிபர்கள் முன்னிலையில் இந்த கருத்தை மோடி தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு மருத்துவம், கல்வி, விவசாயம், சேவைத் துறை, இயற்கை வளங்கள் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றார். நாம் சரியாக திட்டமிடும் போது, வளர்ச்சியை நம்மால் எட்ட முடியும். தொழிற்துறை வளர்வதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை.
இதற்கு தொழில் துறையினருக்கு நம்பிக்கை இல்லை. தொழில்துறையினருக்கு நம்பிக்கையும், தொழில் துவங்கு வதற்கான சூழ்நிலையையும் உருவாக்குவது இந்தியாவுக்கு அவசியம். இருந்தாலும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. சரியான தலைமை கிடைக்கும் பட்சத்தில் தற்போதைய நிலை முற்றிலும் மாறும் என்றும் மோடி தெரிவித்தார். வரி சீரமைப்பு பற்றி கேட்டதற்கு, அது நிதித்துறை சார்ந்த வல்லுனர்கள் சம்பந்தபட்டது. இருந்தாலும் வரிகளை எளிமைப்படுத்துவது தேவை என்றார்.
வளர்ச்சியை பற்றி பேசும் போது அடிப்படைக் கட்டமைப்புத் துறையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஆனால் எரிசக்தி இல்லாமல் கட்டமைப்புத் துறை கிடையாது. ஆனால் பல தொழிற்சாலைகள் தேவையான எரிசக்தி இல்லாமல் மூடிக்கிடக்கின்றன. இதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு இதற்கு யாரும் பொறுப்பேற்க வில்லை என்று மத்திய அரசை சாடவும் மோடி தவறவில்லை.