Last Updated : 02 Dec, 2013 12:00 AM

 

Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

இலக்கு தழுவிய முதலீடுகள்!

பெரும்பாலோர் எந்த ஒரு இலக்கும் இல்லாமலேயே இன்று முதலீட்டை மேற்கொள்கிறார்கள். இதனால் அவர்களால் முதலீட்டை நீண்ட காலம் தொடர முடிவதில்லை. முதலீடு நீண்ட கால அடிப்படையிலேயே பல ஆண்டு காலமாக நல்ல பலன் தந்திருக்கிறது.

பொதுவாக இரண்டு வகையான ரிடர்ன்ஸ் உண்டு. ஒன்று முதலீட்டு ரிடர்ன், (அந்த முதலீடு கடந்த ஆண்டுகளில் எவ்வளவு ரிடர்ன் கொடுத்திருக்கிறது என்பது.) மற்றொன்று முதலீட்டாளர் ரிடர்ன். பல சமயம் முதலீட்டாரின் ரிடர்ன் மிக மிகக் குறைவாகவே உள்ளது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அந்த முதலீட்டில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாதிருத்தல் மற்றும் பொறுமை இல்லாதிருப்பதே. இந்த ஒரு உதாரணத்தின் மூலம் இலக்கு தழுவிய முதலீடு அந்த இடைவெளியை பூர்த்தி செய்துவிடும்.

இன்று பலதரப்பட்ட துறையில் சாதித்தவர்கள் எல்லாம் ஆரம்ப காலத்திலேயே ஒரு இலக்குடன் செயல்பட்டதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. (இலக்கு அல்லது கோல் என்றும் சொல்லலாம்.) கோல் எப்பொழுதும் ஸ்மார்ட் (SMART) ஆக இருக்கவேண்டும், அதாவது Specific (ஒரு குறிப்பிட்ட இலக்காக இருக்க வேண்டும்). Measurable (அது அளவிடக் கூடியதாக இருக்கவேண்டும்), Achievable (அது மேலும் அடையக் கூடியதாக இருக்கவேண்டும்), Realistic (யதார்த்தமாவும் இருக்கவேண்டும்), Time-Bound (அது ஒரு கால வரையறைக்குள் இருக்கவேண்டும்). இவ்வாறு இல்லாதவைக்கு பெயர் இலக்குகள் இல்லை, அது வெறும் விருப்பமே ஆகும், விருப்பம் மட்டும் இருந்தால் எதையும் சாதிக்க முடியாது.

நாம் நம்முடைய நேரத்தை விற்று பணத்தைப் பெறுகிறோம். பணத்தை அப்படியே அஞ்சரை பெட்டியில் வைத்திருந்தால் பணம் வளராது, எனவே நாம் சம்பாதித்த பணத்தைக் கொஞ்சம் வங்கியிலும், ரியல் எஸ்டேட், தங்கம், பரஸ்பர நிதியம், ஈக்விட்டி, போஸ்ட் ஆபீஸ் என பிரித்து போடுகிறோம் அது மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று.

பணம் நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் சிறிய மற்றும் பெரிய அளவில் தேவைப்படுகிறது. உபயோகம் குறைவாக உள்ளவை எல்லாம் நாளடைவில் உபயோகமற்றதாகிவிடும். இன்று அசையா சொத்தை அதிகம் தேடுவதால், நமக்கு எவ்வளவு உழைத்தாலும் போதவில்லை. காரணம் கேட்டால் அதை வாங்கியதால் நான் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது என்ற பதில். இலக்கு இல்லாததால் சிலர் கொஞ்சமாகவும், பலர் அதிகமாக உழைக்கிறார்கள் இரண்டுமே தவறு. இலக்கு இருந்தால் தேவைக்கு உழைக்கலாம், அவ்வாறு செய்தால் நல்ல தரமான வாழ்க்கையும் வாழலாம்.

இன்று நமக்கு நிறைய இலக்குகள் உள்ளன, உதாரணமாக குழந்தையின் கல்வி, திருமணம், ரிடையர்மென்ட், தொழில் தொடங்குதல், வெளிநாட்டு சுற்றுலா, நன்கொடை முதலியவை (பொதுவானவை).

எந்த ஒரு இலக்காக இருந்தாலும் அதை நான்காகப் பிரிக்க வேண்டும். 1. எத்தனை ஆண்டுகளில் நாம் அதை அடைய வேண்டும்? 2. எவ்வளவு பணம் அதற்குத் தேவைப்படும் 3. அதற்கு எவ்வளவு ரூபாய் சேமிக்க வேண்டும் 4. எவ்வளவு ரிடர்ன் அனுமானமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த நான்கும் தெரிந்தால் எந்த ஒரு இலக்கை வேண்டுமானாலும் அடையமுடியும்.

இலக்கு தழுவிய முதலீட்டில் ஒருவரால் நன்கு கவனம் செலுத்தமுடியும் ஏனெனில் அவர்களுடைய கையில் Road Map உள்ளதால் அவர்களுடைய மூலதனம் சரியாகப் பயன்படுகிறது. இன்று நாம் ஒன்றை சரியாக திட்டமிடத் தெரியாவிட்டாலும் தவறாக செய்யாமல் இருந்தாலே போதுமானது.

உதாரணமாக ஒரு வேலை செய்வதற்கு 10 பேர் தேவைப்படும் இடத்தில் 8 பேர் இருந்தாலே, எல்லோரும் கொஞ்சம் அதிக நேரத்தை ஒதுக்கி அதைச் செய்து முடிக்கமுடியும். ஆனால் அதே சமயம் 15 பேர் இருந்தால், நீ செய், நான் செய் என்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு அது சரியான சமயத்தில் செய்ய முடிவதில்லை. நம்முடைய மூலதனம் (Resource) குறைவாகவும், சரியான அளவும் இருந்தாலே நாம் அதை முழுவதுமாக உபயோகப்படுத்துகிறோம், அது அதிகமாக (குறிப்பாக இன்று நகரத்தில் வாழ்வோரிடம் பணம் அதிகம் புழங்குவதாலும், இலக்கு இல்லாததாலும், தேவையற்றவற்றில் பணத்தைச் செலவிடுவதால், எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்குப் போதவில்லை) இருக்கும்போது அதுவே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் வீட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் போகும்போது இடையில் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் வந்தால் கூட நாம் பேசுவது கிடையாது, “ஹாய்” என்று சொல்லி விடுகிறோம், இல்லாவிட்டால் நம்முடைய இலக்கை அடைய முடியாது. இலக்கு இல்லாவிட்டால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.

அன்றாட வாழ்க்கையில் மற்றொரு உதாரணம், நாம் பெரிய பெரிய வணிக வளாகங்களில் பொருள்கள் வாங்கும்போது, நிறைய தள்ளுபடிகள் தருவதால், நிறைய பிஸ்கட், குளிர்பானங்களை வாங்குகிறோம். நிறைய வாங்குவதால் அதை வீணடிக்க மனசில்லாமல் அதிகமாகச் சாப்பிடுகிறோம். இதைவிட தேவையானவற்றை வாங்கினால் பணம் மிச்சப்படுவதோடு அளவாகவும் சாப்பிடமுடியும். இதற்கு ஆங்கி லத்தில் இம்பல்சிவ் பையிங் (IMPULSIVE BUYING) என்று கூறுவார்கள். சின்னச் சின்ன பொருளில் ஆரம்பித்து இன்று மொபைல், லேப்டாப், வீடு, காலிமனை என்று விரிந்து கொண்டே இருக்கிறது. இலக்கு தழுவிய முதலீட்டால் இது எல்லாவற்றயும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவதால் இது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

பி. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x