வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவு

வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 113.24 புள்ளிகள் சரிந்து 20,570.28 ஆக இருந்தது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 43.80 புள்ளிகள் குறைந்து 6,101.10 ஆக காணப்பட்டது.

பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான திங்களன்றே சரிவு காணப்பட்டது. எப்எம்சிஜி, வங்கி, உலோகப் பங்குகள் கடுமையாக சரிந்ததே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

வர்த்தகத்தில் குறியீட்டெண் ஒரு கட்டத்தில் மிக அதிகபட்சமாக 20,771 புள்ளிகளையும், மிகக் குறைவாக 20,550 புள்ளிகளையும் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் 43 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 6,101 புள்ளிகளாகக் குறைந்தது.

லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 1.89 சதவீதம் உயர்ந்து ரூ. 965.40-க்கும், ஹெச்டிஎப்சி பங்கு விலை 1.35 சதவீதம் உயர்ந்து ரூ. 820.80-க்கும், ஓஎன்ஜிசி விலை 1.02 சதவீதம் உயர்ந்து ரூ. 286.75-க்கும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.49 சதவீதம் உயர்ந்து ரூ. 890.20-க்கும், விப்ரோ பங்கு விலை 0.42 சதவீதம் உயர்ந்து ரூ. 483.05-க்கும் விற்பனையானது.

ஐடிசி, சீசா ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனப் பங்கு விலைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in