Last Updated : 02 Oct, 2014 12:44 PM

 

Published : 02 Oct 2014 12:44 PM
Last Updated : 02 Oct 2014 12:44 PM

நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5.6%: பிட்ச் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.6 சதவீதம் இருக்கும் என்று தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் கருத்து தெரிவித்திருக்கிறது. மேலும் அடுத்த நிதி ஆண்டில் (2015-16) இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து வரும் முதலீடுகள், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவையே இதற்குக் காரணம் என்று பிட்ச் கூறியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மத்திய அரசு கொள்கை முடிவுகளும், அதிகாரிகளின் சிறப்பான செயல்பாடு ஆகியவையும் சிறப்பாக இருக்கிறது என்று இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் நிச்சயமற்றத்தன்மை முழுவதும் மறைந்து ஸ்திரத்தன்மை நிலவுகிறது என்று பிட்ச் கருத்து தெரிவித்திருந்தது.

இந்தியாவின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கி கணித்ததை விடவும் பிட்ச் அதிகமாக கணித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5.5 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

கடந்த இரு நிதி ஆண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே இருந்தது. 2012-13-ம் நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும், 2013-14-ம் நிதி ஆண்டில் 4.7 சதவீதமாகவும் வளர்ச்சி இருந்தது. கட்டுமானத்துறையில் இருக்கும் சிக்கல்களைக் களைவது, சீர்திருத்தங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை செயல்படுத்தும் போது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்று பிட்ச் தெரிவித்தது.

பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா மட்டுமே 2014-ம் ஆண்டில் வளர்ச்சியில் இருக்கிறது. வர்த்தகத்துக்கு சாதகமான சூழல் நிலவும் போது இது 2015-ம் ஆண்டிலும் தொடரும் என்று பிட்ச் கூறியிருக்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x