Published : 21 Oct 2013 01:06 PM
Last Updated : 21 Oct 2013 01:06 PM

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ

சென்ற வாரம் என்.ஆர்.ஓ (NRO) கணக்குப் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். அதற்கான வட்டி விகிதங்களைப் பார்ப்போம். இப்போதைய நிலைமையில் என்.ஆர்.ஒ டெபாசிட்டிற்கு வங்கிகள் குறைந்தபட்சமாக 4.5%ம் (7 நாட்களுக்கு) அதிகபட்சமாக 9%ம் (390 முதல் 10 வருடம்) வட்டியைத் தருகின்றன. எஸ்.பி.ஐ போன்ற வங்கிகள் குறுகிய காலத்திற்குக் கூட (7 – 60 நாட்கள்) தொகையைப் பொறுத்து 7.50% - 8.50% தருகின்றன. வங்கியைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன. ஆகவே, நீங்கள் டெபாசிட் செய்யும் முன் ஓரிரு வங்கிகளிடம் ஆராய்ந்து பார்த்துவிட்டு போடுங்கள்.

இப்போது என்.ஆர்.இ (NRE) கணக்குப் பற்றிய விவரத்தைப் பார்ப்போம். என்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில் திறந்துக் கொள்ளலாம்.

சேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT)

நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT)

ரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT)

பிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT)

இந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க வேண்டும். அவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க முடியாது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய உள்நாட்டு உறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து கொள்ளலாம். நெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர் ஆஃப் அட்டார்னி மூலமும் ஆப்பரேட் செய்யலாம்.

என்.ஆர்.ஓ கணக்கைப் போல இந்த கணக்கும் இந்திய ரூபாயில்தான் இருக்கும். இந்த கணக்கில் வெளிநாட்டில் இருந்து மட்டும் தான் பணம் போட முடியும். உள்நாட்டு வருமானத்தை இந்தக் கணக்கில் போட முடியாது. இந்த வகைக் கணக்குகளின் தற்போதைய பெரிய கவர்ச்சி என்னவென்றால், இவ்வகை கணக்குகளிலிந்து வரும் வட்டி வருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில் செலுத்தத் தேவையில்லை. இந்த வசதி உள்நாட்டில் வாழும் மக்களுக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் இந்தச் சலுகைகளைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணம், வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு பணவரத்தை அதிகப்படுவதற்காகத்தான். மேலும் இவ்வகைக் கணக்குகளுக்கு செல்வ வரி (Wealth Tax) கூட கிடையாது.

என்.ஆர்.இ கணக்குகளில் வங்கிகள் தங்களுடைய விருப்பத்தின்பேரில் ரூபாய் 50,000 வரை ஓவர் டிராயிங்கை இரண்டு வாரத்திற்கு மிகாமல் அனுமதிக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளிலிருந்து செலுத்தும் பேமண்ட் மூலம்தான் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். என்.ஆர்.ஒ கணக்குகளைப் போலவே இவ்வகை கணக்குகளுக்கும் தங்கள் விருப்பம் போல வட்டி வழங்கலாம். ஆனால் அவ்வாறு வழங்கப்படும் வட்டி, உள்நாட்டு டெபாசிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வகை என்.ஆர்.இ டெபாசிட்டுகளை குறைந்தபட்சமாக ஓராண்டுக்குத்தான் திறக்க முடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள்வரை வைத்துக்கொள்ளலாம்.

வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக இக்கணக்கிற்கு பணம் அனுப்புவதுடன், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், வெளிநாட்டுப் பணம் போன்றவை மூலமும் இக்கணக்குகளில் டெபாஸிட் செய்யலாம். இந்த கணக்குகளின் ஒரு பெரிய கவர்ச்சி வெளிநாடு வாழ் இந்தியர் எப்பொழுது வேண்டுமானாலும்/ தங்களுக்கு தேவைப்பட்டபொழுது தாங்கள் வாழும் நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ எந்த விதமான கேள்வியும் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லலாம்.

அவ்வாறு செய்ய தங்களது வங்கிக்கு பரிந்துரை செய்தால் மட்டும் போதும்.

ரூபாய் 1 கோடி வரையிலான கடனை, என்.ஆர்.இ டெபாஸிட்டை அடகுவைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ பெற்றுக் கொள்ளலாம். இவ்வகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டு, அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள், என்.சி.டி, போன்றவற்றில் தாராளமாக முதலீடு செய்து தாங்கள் வாழும் நாடுகளுக்கு எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.

இவ்வகை முதலீடுகளுக்கு உரித்தான வருமான வரி ஏதும் இருந்தால், அவை மூலத்திலேயே பிடிக்கப்படுகிறது. தற்பொழுது என்.ஆர்.இ சேமிப்பு கணக்குகளுக்கு 4%ம் வட்டியும் டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகளைப் பொருத்து காலத்தைப் பொறுத்து 10.20 சதவிகிதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது. ஒருசில வங்கிகள் என்.ஆர்.இ. சேமிப்புக் கணக்கிற்கு 7% வரை வட்டியைத் தருகின்றன. எஃப்.சி.என்.ஆர். கணக்குகளைப் பற்றிப் அடுத்த பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x