Published : 03 Jan 2014 12:57 PM
Last Updated : 03 Jan 2014 12:57 PM

ஜான் மைனார்ட் கெய்ன்ஸின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பொருளியல் அறிஞர் ஜான் மைனார்ட் கெய்ன்ஸ்(1883-1946). இவரின் பொருளாதார சிந்தனைகள் ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு தருணத்திலாவது செயல்பாட்டில் இருந்திருக்கும். இன்றும் எல்லா நாடுகளிலும் பொருளியல் விவாதங்களில் கெய்ன்ஸ்யின் சிந்தனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆல்பிரெட் மார்ஷல், பிகு போன்ற பொருளியல் அறிஞர்களிடம் படித்தாலும், அவர்களின் சிந்தனைக்கு மாற்றான சிந்தனைகளை நமக்குத் தந்தவர், முதலில் சிறிது காலம் இங்கிலாந்து அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்தபோது இந்திய பணக் கொள்கை பற்றி தனது முதல் புத்தகமான Indian Currency and Finance எழுதினார். பின்னர் Tract on Monetary Reform மற்றும் Treatise on Money என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். இவ்விரண்டு புத்தகங்களிலும் தொன்மை பொருளாதாரக் கருத்துகளையே கூறியிருந்தார்.

முதலாம் உலகப் போருக்கு பிறகு இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க அதனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக 1930களில் ஏற்பட்ட ‘பெரு மந்தம்’ (The Great Depression) கெய்ன்சின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த The General Theory of Employment, Interest and Money (இனி, பொதுக் கோட்பாடு) என்ற புத்தகத்தை 1936-ல் வெளியிட்டார்.

பொருளியலை புரட்டி போட்ட ஒரு புத்தகம் இந்த பொதுக் கோட்பாடு. ஒரு நாட்டு பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கு ஒரு புது வழியை கெய்ன்ஸ் நிறுவினார். மொத்த தேவை, மொத்த அளிப்பு, என்ற புதிய பொருளியல் கருத்துகளை உருவாக்கினார். அதுவரை ஒரு நாட்டில் உள்ள தனித்தனி நிறுவனங்களை ஆராய்ந்து பொருளியலில் நாட்டின் மொத்த பொருளாதாரத்தை ஆராய ஒரு புதிய கருத்தை கெய்ன்ஸ் புகுத்தினார்.

ஒரு நாடு முழு வேலைவாய்ப்பு என்ற நிலையை அடைய அரசின் செலவுகளை உயர்த்துவது அவசியம் என்று கூறினார். வேலையின்மையைக் குறைக்க கூலியைக் குறைக்கக்கூடாது, அவ்வாறு குறைத்தால் மக்களின் தேவை குறைந்து மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற கருத்தை கெய்ன்ஸ் முன்னிறுத்தினார். தனியார் துறை வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றால், அதனை அரசு செய்யவேண்டும் என்றார். வேலைவாய்ப்பை உருவாக்க அரசு பொது செலவை அதிகப்படுத்தி, அதன் மூலம் பொது வேலைகளான சாலை நிறுவுதல், குடிநீர் வழங்குதல் என்ற பல வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை செய்யலாம் என்று கெய்ன்ஸ் யோசனை கூறினார். இதற்காக பற்றாக்குறை நிதியாக்கமான பணம் அச்சிடலைக் கூட பயன்படுத்தலாம் என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, உலக வங்கி, பன்னாட்டு பண நிதியம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் கெய்ன்ஸ். அதன் பிறகு சுதந்திரம் அடைந்த பல வளரும் நாடுகள் இவரின் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x