

மாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT). இது முன்பிருந்த விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட ஒரு நுகர்வு வரி. பழைய விற்பனை வரி அமைப்பில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி அது வரிச்சுமையினை பெருக்கிவிடுகின்றது. மேலும், உள்ளீடுகள் மீது முதலில் வரி விதிக்கப்படுகிறது, பின்னர் உள்ளீடு வரி சுமையோடு ஒரு பொருள் உற்பத்தியானபிறகு அந்த இறுதிபொருள் மீது மீண்டும் வரி விதிக்கப்படுகின்றது. இது வரிமேல் வரி விதிப்பாகும்.
ஆனால் வாட் இதுபோன்ற குறைகளைத் தவிர்த்து, ஒரு பொருளின் உற்பத்தி/விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்கு கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த வாட் விதிக்கப்படுகின்றது. உதாரணமாக, நீங்கள் ரு. 1,000 மதிப்புள்ள சர்க்கரை (மூலப்பொருள்) வாங்கி அதற்கு 10 % வரிவீதத்தில் ரு. 100 வரியாக செலுத்துகின்றீர்கள். இதை உள்ளீடாகப் பயன்படுத்தி மேலும் ஒரு ஆயிரம் ருபாய் செலவழித்து ஒரு இனிப்பு தயாரிக்கின்றீர்கள் எனக்கொள்வோம். இப்போது நீங்கள் தயாரித்த இனிப்பின் மதிப்பு ரு. 2000; இதை நீங்கள் விற்கும்போது ரு. 200 (10 % of Rs. 2000) வரியாக பெறுவீர்கள். இதில் நீங்கள் ரு. 100 வைத்துக்கொண்டு மீதமுள்ள ரு. 100 மட்டும் அரசுக்கு வரியாக செலுத்தினால் போதும்; காரணம் நீங்கள் சர்க்கரை வாங்கும்போது அதற்கான வரி ரு. 100யை முன்பே செலுத்திவிட்டீர்கள். ஆக, ரூ 2,000 மதிப்புள்ள பொருளின் மீதான வரி ரூ.200 (100 சர்க்கரை மீதும்+ 100 இனிப்பின் மீதும்) கிடைத்துவிட்டது.
இதுவே முன்னர் இருந்த விற்பனை வரி முறையில் பொருளின் மதிப்பு ரூ. 2,100 என்று கணக்கிடப்படும் (ரூ. 1,000 சர்க்கரை மதிப்பு, ரூ 100 சர்க்கரை மீதான வரி, ரூ. 1,000 இனிப்பு மதிப்பு). இதன் மீது வரி ரூ 210 வசூலிக்கப்படும். ஆக மொத்த வரி வசூல் ரூ310 (100+210). இதனால் பொருளின் விலை மிக அதிகமாகும்.
நாடுமுழுக்க 2005 இல் இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2007 இல் அமுல் செய்யப்பட்டது. அடிப்படையில் 4 %, 12.5 % என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டும் கொண்டது வாட். தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கு 1 % இம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் மற்ற வகைகளாகும். தற்போது, வாட்டின் வளர்ச்சி விகிதம் விற்பனை வரியின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகரித்துள்ளது.