Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

ஆர்.எஃப்.சி. கணக்குகளை செயல்படுத்துவது எப்படி?

சென்றவாரம் உள்நாட்டில் செய்த ரியல் எஸ்டேட் முதலீடுகளை வெளி நாட்டிற்குத் திருப்பி எடுத்து செல்வது குறித்துப் பார்த்தோம். அதேபோல் ஆர்.எஃப்.சி (RFC – Resident Foreign Currency) கணக்குகள் பற்றியும் சிறிது கண்டறிந்தோம். இவ்வாரம் ஆர்.எஃப்.சி கணக்குகள் குறித்த பிற விவரங்களைக் கண்டறிவோம்.

ஆர்.எஃப்.சி கணக்குகளை உள்நாட்டில் உள்ள நெருங்கிய உறவினருடன் ஜாயிண்டாக முன்னவர் அல்லது இருப்பவர் அடிப்படையில் திறந்து கொள்ளலாம்.

இருந்தபொழுதிலும், நெருங்கிய உறவினர் அந்த கணக்கை முன்னவர் இருக்கும் வரை செயல்படுத்த முடியாது. ஆர்.எஃப்.சி கணக்குகளை பொதுவாக பவுண்ட் ஸ்டெர்லிங், அமெரிக்க டாலர், ஜப்பானிய யென், யூரோ போன்ற நாணயங்களில் திறந்து கொள்ளலாம்.

அவ்வாறு உள்ள கணக்கை, இந்திய ரூபாயில் மாற்றும் பொழுது சில வங்கிகள் பணப் பரிமாற்றத்திற்கு உண்டான கட்டணங்களைத் தள்ளுபடி செய்கின்றன. இக்கணக்குகளில் முதலீடு செய்வதற்கு உச்சவரம்பு என்று ஏதும் கிடையாது. பிற கணக்குகளைப் போல இக்கணக்குகளுக்கும் நாமினியைத் தேர்வு செய்து கொள்ளலாம். இக்கணக்குகளில் இருந்து அந்நிய செலாவணியைப் பணமாகவோ/ காசோலையாகவோ/ டிராவலர்ஸ் செக்காகவோ/ டிமாண்டு டிராஃப்ட் ஆகவோ நமது மத்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்குட்பட்டு எடுத்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஓய்வூதியத் தொகையை இக்கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். அதே போல் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடண்ட், வட்டி, வாடகை மற்றும் பிற வருமானங்களை இக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். மூலத்தில் வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

ஏனென்றால் இக்கணக்குகளை வைத்துக் கொள்பவர்கள் “உள்நாட்டில் வசிப்பவர் ஆனால் சாதரணமாக உள்நாட்டில் வசிப்பவர் அல்ல” RNOR (RESIDENT BUT NOT ORDINARILY RESIDENT) என்ற அடிப்படையில் வருவர்.

இக்கணக்குகளிலிருந்து வெளி நாட்டிற்கு செலுத்த வேண்டிய தொகைகளையும் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பும் பொழுது என்.ஆர்.ஈ/ எஃப்.சி.என்.ஆர் (NRE/ FCNR) கணக்குகளில் உள்ள தொகைகளை எந்த விதமான அபராதமும் இல்லாமல் ஆர்.எஃப்.சி கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வகையிலுள்ள நடப்பு கணக்குகளுக்கு பொதுவாக வட்டி வழங்கப்படுவது இல்லை. இவ்வகையான சேமிப்பு கணக்குகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் கரண்ஸியை பொருத்து வழங்கப்படுகின்றன.

இதுவரை நாம் வங்கிக் கணக்குகள் குறித்தும், ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்தும், சில அடிப்படை விஷயங்களான என்.ஆர்.ஐ / பி.ஐ.ஓ போன்றோர் யார் என்பதை குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

உலக அளவில் வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் இரண்டு நாடுகள் உட்படும். அவையாவன இந்தியா மற்றும் சீனா. பல வெளிநாட்டு நிறுவனங்கள், பென்ஷன் ஃபண்டுகள், நேரடி முதலீட்டாளர்கள், வெஞ்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் உலகில் எங்கு வளர்ச்சி இருக்கிறது என்று தேடிச் செல்கின்றனர்.

மேற்கண்ட நிறுவனங்கள் விரும்பி முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அடுத்த 20 - 30 ஆண்டுகள் கண்ணோட்டத்துடன் ஒருவர் முதலீடு செய்யும் பொழுது அவருடைய முதலீட்டு புத்தகத்தில் இந்தியா இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

கண்காணாத தேசத்தில் இருப்பவர்கள்கூட இந்தியப் பங்குச் சந்தையில் மறைமுகமாக தங்களது நாடுகளில் உள்ள ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்து வருகிறார்கள்.

இவ்வகையான ரிஸ்க் உள்ள மற்றும் ரிஸ்க் இல்லாத, என்.ஆர்.ஐ மற்றும் பி.ஐ.ஓ – களுக்கான, முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இனி வரும் வாரங்களில் விரிவாகக் காண்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x