இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் 193 கோடி டாலர் திரட்டல்

இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் 193 கோடி டாலர் திரட்டல்
Updated on
1 min read

இந்திய நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டிலிருந்து 193 கோடி டாலர் தொகையைத் திரட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து கடன் வாங்குவது, அன்னியச் செலாவணியில் மாற்றத்தக்க கடன் பத்திர வெளியீடு மூலம் இத்தொகை திரட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இவ்விதம் திரட்டப்பட்ட தொகை 3,354 கோடி டாலராகும்.

வெளிநாட்டிலிருந்து 52 இந்திய நிறுவனங்கள் இவ்விதம் நிதி திரட்டியுள்ளன. இதில் தானாக திரட்டும் வழி மூலம் 71.92 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. இவ்விதம் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி தேவையில்லை. 12 நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வழிமுறை மூலம் 121 கோடி டாலரைத் திரட்டியுள்ளன.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 50 கோடி டாலரும், டாடா கெமிக்கல்ஸ் 19 கோடி டாலரும், டாடா சன்ஸ் 15 கோடி டாலரும் வெளிநாட்டு கடன் மூலம் (இசிபி) திரட்டியுள்ளன.

பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனண் 11.48 கோடி டாலரை முந்தைய கடனுக்காக மறு நிதியாக திரட்டியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மூலதன பொருள் இறக்குமதிக்காக 9.5 கோடி டாலரைத் திரட்டியுள்ளது.

தாமாக நிதி வரும் வழி மூலம் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் 23 கோடி டாலரை மூலதன பொருள் இறக்குமதிக்காகத் திரட்டியுள்ளது. பாரத் போர்ஜ் நிறுவனம் 12 கோடி டாலரையும், பாரத் ஓமான் ரீபைனரீஸ் நிறுவனம் 7 கோடி டாலரையும், முந்தைய கடனை அடைக்க மறு நிதியாக திரட்டியுள்ளது.

ரெனியூ வின்ட் எனர்ஜி நிறுவனம் 4 கோடி டாலரை மின் திட்டங்களுக்காகவும், டாரன்ட் பார்மா நிறுவனம் 4 கோடி டாலரை ரூபாய் செலவினத்துக்காகவும் திரட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in