Published : 10 Oct 2014 12:52 PM
Last Updated : 10 Oct 2014 12:52 PM

18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

மத்திய அரசை போல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 18 லட்சம் பேருக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா.

அவரது வழியில் ஆட்சி புரிந்து வரும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2014 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு, அதாவது 100 விழுக்காடிலிருந்து 107 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதுபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்திட முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

கடந்த ஜூலை முதல் கணக்கீடு

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2014 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,558 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று காலை நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் க.சண்முகம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x