Last Updated : 10 Oct, 2014 10:27 AM

 

Published : 10 Oct 2014 10:27 AM
Last Updated : 10 Oct 2014 10:27 AM

நரேந்திர மோடியின் டிஜிட்டல் திட்டத்தை எதிர்பார்க்கிறேன்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்

பிரதமர் மோடியின் டிஜிட்டல் திட்டத்தை பெரிதும் எதிர்பார்ப்பதாக முன்னணி சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்திருக்கிறார். மேலும் இன்று பிரதமரை சந்திக்கவிருப்பதாகவும், இருவரும் இணைந்து 100 கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு இணையத்தை கொண்டு சேர்ப்பது குறித்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடந்த பேஸ்புக் நிறுவன மாநாட்டில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இத்தகவலைத் தெரிவித்தார். பேஸ்புக் மட்டுமே அனைத்து இந்தியர்களுக்கும் இணைய சேவையைக் கொடுத்துவிட முடியாது. அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். அரசு, டெலிகாம் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு பேஸ்புக் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியா வருவது இதுதான் முதல் முறையாகும். இணையத்தை அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பது எனக்கு தெரியும். அனைத்து கிராமங்களுக்கும் இணையத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டிருக்கிறார். இதில் பேஸ்புக் எப்படி உதவ முடியும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இப்போதைக்கு இந்தியாவில் 24.3 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும், இதில் 10 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

பேஸ்புக் ஆரம்பித்திருக்கும் இண்டர்நெட்.ஓஆர்ஜி திட்டத்தை மோடியிடம் விளக்க இருப்பதாகவும் தெரிவித்தார். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இணைய வசதியை சாத்தியமாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.உலகத்தில் இன்னும் 500 கோடி நபர்களுக்கு இணையவசதி இல்லை. அவர்களுக்கு இணையவசதி கொடுப்பதுதான் இந்த திட்டமாகும்.

பேஸ்புக் எரிக்சன், நோக்கியா, ஓப்ரா, குவால்காம் மற்றும் சாம்சங் ஆகியவை ஒன்றாக இணைந்து குறைந்த விலையில் அதிக தரமுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கிறது. இதன் மூலம் இதுவரை 30 லட்சம் மக்களுக்கு இணைய வசதி கிடைத்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் டாட்காம் நிறுவனத்தின் ஜெப் பியோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா ஆகியோர் இந்தியா வந்தார்கள். இப்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் இந்தியா வந்திருக்கிறார். பெண்கள், விவசாயிகளுக்காக சிறப்பு `ஆப்ஸ்’களை உருவாக்குவதற்கு 10 லட்சம் டாலர் தொகையை ஒதுக்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x