Published : 18 Oct 2013 12:02 PM
Last Updated : 18 Oct 2013 12:02 PM

முதலீடு செய்யுங்கள் அல்லது அதிக டிவிடெண்ட் அளியுங்கள் - ப. சிதம்பரம் அறிவுரை

பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி நிதியை முதலீடு செய்யுமாறு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தவுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இத்தகைய அறிவுரையை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு செய்யுங்கள் அல்லது முதலீட்டாளர்களுக்கு அதிக டிவிடெண்ட் (ஈவுத் தொகை) அளிக்க வேண்டும் என்று அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவார் என்று தெரிகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை நிதியமைச்சர் சிதம்பரம் வியாழக்கிழமை பிற்பகலில் சந்திப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திப் போடப்பட்டதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அரசு நிறுவனங்களிடம் உபரியாக ரூ. 2.8 லட்சம் கோடி நிதி கையிருப்பில் உள்ளதாகத் தெரிகிறது. பொருளாதார தேக்க நிலையைப் போக்கும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துவார் என்று தெரிகிறது.

அரசுத் துறை நிறுவனங்களின் உபரி நிதிகள் வெறுமனே வங்கிகளில் உபயோகமின்றி உறங்கிக் கிடப்பதில் பயனில்லை. அதற்குப் பதிலாக புதிய முதலீடுகளை நிறுவனங்கள் மேற்கொள்ளலாம். அல்லது முதலீடு செய்யும் நிறுவனங்களிடம் அத்தொகையை அளிக்க வலியுறுத்தப் போவதாக பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2012-13-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்குச் சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இந்த அளவுக்கு சரிந்தது இதுவே முதல் முறையாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீத அளவுக்கே இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிகவும் குறைவான வளர்ச்சியாகும். இதனால் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடும் வகையில் அவர் இத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் மத்திய அரசு இருப்பதால் நிறுவனங்களுக்கு சலுகைகளை அரசால் அளிக்க முடியாது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க நிதியமைச்சர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதிக டிவிடெண்ட் அளிக்க பொதுத்துறை நிறுவனங்கள் முன்வரும்பட்சத்தில் அதன் மூலம் அரசுக்கு கூடுதலாக டிவிடெண்ட் கிடைக்கும். அது பற்றாக்குறையை ஓரளவு குறைக்க உதவும். எனவே இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு நிதியமைச்சர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் மூலம் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 73,866 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது ரூ. 55,433 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இன்னும் 5 மாதமே உள்ள நிலையில் டிவிடெண்ட் இலக்கையாவது எட்ட அரசு முயற்சிக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x