Published : 01 Feb 2014 10:38 AM
Last Updated : 01 Feb 2014 10:38 AM

அலைக்கற்றை பயன்பாட்டு கட்டண நிர்ணயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக் கற்றையை பயன்படுத்துவதற்கான கட்டண நிர்ணயத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தில் (ஏஜிஆர்) 5 சதவீதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டண விகிதம் அனைத்து தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதன்படி 900 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களது மொத்த வருமானத்தில் 5 சதவீதத்தை பயன்பாட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

புதிய ஏலத்தில் பங்கேற்காத நிறுவனங்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வார தொடக்கத்தில் அதிகாரமளிக் கப்பட்ட அமைச்சர்கள் குழு கட்டண நிர்ணயத்தை ஏற்று அதை அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான பயன்பாட்டுக் கட்டணம் (எஸ்யுசி) 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருந்தது. இதை ஆராய்ந்த தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இதை ஒரே சீராக நிர்ணயிக்குமாறு பரிந்துரைத்தது. இதன்படி நிறுவனங்களின் வருமானத்தில் 5 சதவீதம் கட்டணமாக வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 2012-13-ம் நிதி ஆண்டில் அரசுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய கட்டணம் ரூ. 5,689 கோடியாகும்.

பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், உள்ளிட்ட 8 நிறுவனங்கள் விண்ணப்பித் துள்ளன. பிப்ரவரி 3-ம் தேதி மொத்தம் 900 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் மற்றும் 1,800 மெகாஹெர்ட்ஸ் பேண்டில் 403.2 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையும் ஏலம் மூலம் விற்பனைக்கு வருகிறது. ஸ்பெக் ட்ரம் ஏல விற்பனை மூலம் ரூ. 40,874.50 கோடி திரட்ட முடியும் என அரசு எதிர்பார்க்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x