Published : 05 Oct 2014 12:53 PM
Last Updated : 05 Oct 2014 12:53 PM
மற்ற முக்கிய நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் நிப்டி 26 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதேபோல சென்செக்ஸ் 25.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்திருக்கும் அந்நிய முதலீடே இதற்கு காரணம். நடப்பாண்டில் இதுவரை 1,381 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இந்தியாவுக்கு அடுத்து இந்தோ னேஷியாவின் ஜகர்தா காம்போடிட் குறியீடு 15.8 சதவீத அளவுக்கு நடப்பாண்டில் உயர்ந்திருக்கிறது. இந்தோனேஷியாவுக்கு 400 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு அடுத்து அதிக அந்நிய முதலீடு சென்றிருப்பது தைவானுக்குதான். அங்கு 1,080 கோடி டாலர் அந்நிய முதலீடு சென்றிருக்கிறது. கடந்த வருடம் மே மாதம் முதல் செப்டம்பர் வரை 300 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியே சென்றது. ஆனால் செப்டம்பரில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டது மற்றும் பிரதமர் வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்டது ஆகிய காரணங்களால் சூழ்நிலை மாறியது.
கடந்த செப்டம்பர் முதல் இந்த செப்டம்பர் வரை 2,200 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய கடன் சந்தைக்கும் 1,600 கோடி டாலர் அந்நிய முதலீடு வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT