Published : 14 Feb 2014 12:33 PM
Last Updated : 14 Feb 2014 12:33 PM

வரவேற்பும் ஏமாற்றமும் கலந்தது: கோவை தொழில்துறையினர் கருத்து

தமிழக பட்ஜெட் வரவேற்பையும், ஏமாற்றத்தையும் அளிப்பதாக உள்ளது என கோவை தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காட்மா

பசுமை மின்சக்தி வழித் தடங்களை ரூ. 1,593 கோடி செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ. 119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; சுமார் 1,500 கிலோமீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்படும்; தடையில்லா மின்சாரம் கிடைக்க வலிமையான மின்வழித்தடங்கள் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

தொழில்முனைவோர் அமைப்பு களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, குறுந்தொழில் குழுமங்களுக்கு 70 சதவீத மானிய உதவித்திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

தற்போதைய நிலையில், கடுமை யான மின்வெட்டு காரணமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடியில் குறுந்தொழில் நிறுவனங்கள் சிக்கி தவித்து வருகின்றன.

எனவே, தாய்கோ மூலம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை சொத்து பிணைய கடனுதவி வழங்க வேண்டும்; தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் 8 சதவீத வட்டியில் புதியதாக இயந்திரம் வாங்க கடனுதவி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை.

கோவை மாநகரை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் குறுந்தொழில்பேட்டைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக் கையும், மாநில அரசு பல்வேறு துறைகளுக்கு கொள்முதல் செய்கின்ற பொறியியல் தொடர்பான உதிரிபாகங்களை 25 சதவீதம் குறுந்தொழில் முனைவோர்களிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையிலும் சாதகமான அறிவிப்பு இல்லை.

கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு பட்ஜெட் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்கிறார் காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார்.

சைமா

தமிழகத்தில் 5 லட்சம் பஞ்சு பேல்களே உற்பத்தியாகின்றன. ஆனால், பஞ்சாலைகளுடைய தேவை 120 லட்சம் பேல்கள் ஆகும்.

இந்நிலையில், தமிழக அரசு பட்ஜெட்டில் பருத்தி உற்பத்தியை மாநிலத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு பருத்தி சாகுபடி திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. 3.34 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் பருத்தி அளவை 2014 - 2015 நிதியாண்டில் 3.70 லட்சம் ஏக்கராக தமிழ்நாடு பருத்தி சாகுபடி திட்டத்தின் மூலம் உயர்த்துவதை வரவேற்கிறோம்.

தமிழக பஞ்சாலைகளுக்கு தேவையான பஞ்சு பேல்களை வடமாநிலங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிக லாரி வாடகை கொடுத்து இறக்குமதி செய்து வருகின்றன. அரசு தற்போது அறிவித்திருக்கும் தமிழ்நாடு பருத்தி சாகுபடி பெருந்திட்டம் செயல்பட தொடங்கினால், நீண்டகால அடிப்படையில் பருத்தி உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவடையும்.

பஞ்சாலைகள் கணிசமான காற்றாலைகளை தமிழகத்தில் நிறுவியுள்ளன. இருப்பினும் காற்று காலத்தில் உற்பத்தியான மின்சாரத்தை வெளியேற்ற தேவையான மின்தொகுப்பு இல்லாததால் காற்றாலைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ. 1,593 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது வரவேற்கத் தகுந்தது என்கிறார் சைமா தலைவர் டி.ராஜ்குமார்.

கொடிசியா

தமிழக பட்ஜெட்டில் புதிதாக வரி விதிப்பு இல்லாததற்கு முதலில் நன்றி தெரிவிக்கிறோம். குறுந்தொழில் குழுமங்கள் அமைக்க ரூ. 25 கோடியும்,70 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், பசுமை மின்சக்தி ரூ.1,593 கோடி நிதி அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

அதேபோல், சாலை விரிவாக்கத்திற்கு ரூ. 2,800 கோடி, கோழி வளர்ப்பு வளர்ச்சிக்கு ரூ. 25 கோடி, தமிழ்நாடு பருத்தி சாகுபடி திட்டத்திற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு, ரூ. 100 கோடி திறன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு, கட்டுமான தொழிலாளர்களின் நலனிற்காக ரூ. 50 கோடிக்கு ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

கோவையில் தற்போதை நிலையில் தொழில்துறையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது. எனவே, தொழில் துறை வளர்ச்சிக்காக ஐ.டி.சி. ரிவர்ஸல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும். குறுந்தொழில் கூடங்கள் தொடங்குவதற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். குறைந்த மின் அழுத்தம் 150 எச்.பி.யில் இருந்து 250 எச்.பி.யாக அதிகரிக்க வேண்டும்.

குறுந்தொழில் நிறுவனங் களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் விற்பனை விலை முன்னுரிமை கொடுக்க வேண்டும். கோவை, கரூர் ஆகிய இடங்களில் புதிய தொழில்பேட்டைகள் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மீது எவ்வித அறிவிப்பும் இல்லா தது ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார் கொடிசியா தலைவர் ராமச்சந்திரன்.

சீமா

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் கணினிமயமாக் கப்படும் என்ற அறிவிப்பினால் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தமுடியும். தேசிய பசுமை திட்டத்தினை செயல்படுத்த ரூ. 323 கோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ரூ. 50 கோடி, காற்றாலை மின்சக்தியை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் போன்றவை வரவேற்கத் தகுந்தவை.

தமிழகத்தில் முதலீட்டாளர்களை கவர சர்வசேத முதலீட்டாளர்கள் கூட்டம், சிறு,குறுதொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமங்கள் அமைப்பது, திறன் மேம்பாட்டிற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு ஆகியவற்றை வரவேற்கிறோம்.

பொறியியல் பொருள்கள் ஏற்றுமதிக்கான சில சலுகை களையும் மற்றும் ஏற்றுமதிக்கான வாட் வரியில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், இதை பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் சில நலத்திட்டங்களை நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின் போது அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் சீமா தலைவர் டி.சி.தியாகராஜன்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு

புதிய வரி விதிப்பு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்கிறோம். காற்று காலத்தில் உற்பத்தியான மின்சாரத்தை வெளியேற்ற தேவையான மின்தொகுப்பிற்கு ரூ. 1,593 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பருத்தி சாகுபடி திட்டம், ரூ. 683 கோடியில் ரயில்பாதையில் மேம்பாலங்கள் ஆகிய அறிவிப் புகள் வரவேற்கத் தகுந்தது.

குறுந்தொழில் வளர்ச்சிக்காக குறுந்தொழில்குழுமங்கள் அமைப்பதையும் வரவேற்கிறோம் என்கிறார் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் கோவை தலைவர் ஆர்.ஆர்.பாலசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x