Last Updated : 08 Feb, 2014 12:00 AM

 

Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM

மனை அங்கீகாரம்
: எல்லாம் ஒன்று அல்ல

படித்தவர்கள் கூட அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கி ஏமாறும் காலம் இது. பொதுவாக அப்ரூவல் எனப்படும் அங்கீகாரம் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பஞ்சாயத்து அப்ரூவல், நகர ஊரமைப்பு இயக்கம் என்கிற டி.டி.சி.பி. அப்ரூவல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்கிற சி.எம்.டி.ஏ. அப்ரூவல் என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று விதமான அப்ரூவல்கள் பற்றி பார்ப்போமா?

பஞ்சாயத்து அப்ரூவல்

பொதுவாகக் கால் ஏக்கருக்கு (10,890 சதுர அடி)உட்பட்ட லேஅவுட், பஞ்சாயத்து அப்ரூவலுக்குக் கீழ் வருகின்றன.

வழிகாட்டி குறிப்பிட்ட இடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து லேஅவுட் போட ஆட்சேபணை எதுவும் இல்லை எனச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் கடிதம் கொடுத்தால் போதும்.

பஞ்சாயத்து அப்ரூவல் லேஅவுட்டில் மனைகளுக்கு உள்ளே சாலையின் அகலம் 20 அடி, 16 அடி இருக்க வேண்டும்.

மனை விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதால், 1200 சதுர அடியில் லேஅவுட் போடுவது குறைந்துவிட்டது. அதற்குப் பதில் 800 சதுர அடி, 600 சதுர அடி மனை லேஅவுட் நிறைய போடப்படுகின்றன.

டி.டி.சி.பி. அப்ரூவல்

சி.எம்.டி.ஏ. எல்லையைத் தாண்டிய மனைகளுக்கு டி.டி.சி.பி. அப்ரூவல் வழங்கப்படுகிறது. (சென்னை முழுவதும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் சில பகுதிகள் தவிர்த்து)

லேஅவுட் மொத்த இடம் ஐந்து ஏக்கருக்குள் (2,17,800 சதுர அடி)இருந்தால் மாவட்டங்களில் செயல்படும் டி.டி.சி.பி.பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு மேல் இடம் செல்லும்பட்சத்தில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரு அலுவலகங்களுக்கும் விண்ணப்பம் செய்வதிலோ, விதிமுறைகளிலோ பெரிய வித்தியாசம் இல்லை.

டி.டி.சி.பி. அப்ரூவல் என்றால் குறிப்பிட்ட லேஅவுட்டில் பூங்கா, சமூக நலக்கூடம், பள்ளிக்கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அதுதொடர்பான இடத்தை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

லேஅவுட்டில் பிரதானச் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 35 அடியாகவும், மனைகளுக்கு உட்பட்ட சாலையின் அகலம் 23 அடியாகவும் இருந்தால் மட்டுமே அப்ரூவல் கிடைக்கும்.

இந்த அப்ரூவலில் குறைந்தபட்ச மனை அளவு 1,500 சதுர அடி. ஆனால், 1,200 சதுர அடி மனைகளும் லேஅவுட்டில் இடம் பெற்று விடுகின்றன. ஒருவர் டி.டி.சி.பி. மனை ஒரு கிரவுண்ட் (2,400 ச.அடி), வாங்கி, சிறிது காலம் கழித்து அதில் பாதியை (1,200 சதுர அடி) விற்கும்போது, லேஅவுட்டில் குறைந்த பரப்பு மனைகளும் இடம் பெற்றுவிடுகின்றன.

நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான அனுமதியும் இதன் கீழ்தான் வருகிறது.

சி.எம்.டி.ஏ. அப்ரூவல்

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான லேஅவுட் மற்றும் கட்டிட அனுமதியைச் சி.எம்.டி.ஏ. வழங்கி வருகிறது.

மனை லேஅவுட் மற்றும் கட்டிட அனுமதியைப் பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் இருந்தால் எந்த அளவாக இருந்தாலும் சி.எம்.டி.ஏ.-வின் அனுமதி பெறுவது அவசியம்.

சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் நகராட்சிகள் வந்தால், அவற்றின் மூலம் சி.எம்.டி.ஏ. அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு லேஅவுட் அல்லது கட்டிடம் சி.எம்.டி.ஏ. அப்ரூவல் பெற்றதாக இருந்தாலும், சி.எம்.டி.ஏ.-வின் கட்டிடப் பிளான்படி கட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே வாங்குவது கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x