Last Updated : 25 Oct, 2014 03:00 PM

 

Published : 25 Oct 2014 03:00 PM
Last Updated : 25 Oct 2014 03:00 PM

மின்னணு முறையில் அலைக்கற்றை ஏலம்: தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

அலைக்கற்றை ஏலத்தை மின்னணு முறையில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை கோரியுள்ளது. பல்வேறு தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு ஒரே சமயத்தில் மின்னணு முறையில் ஏலம் நடத்து வதற்கு தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பலாம் என தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 22 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு ஏலம் நடைபெற உள்ளது. இத்தகைய ஏலம் நடத்துவதற்கு திறமை வாய்ந்த நிறுவனங்கள் தங்களது முன் அனுபவம், நிதி ஆதாரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகாஹெர்ட்ஸ், 900 மெகாஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகாஹெர்ட்ஸ், 2,300 ஹெகாஹெர்ட, 2,500 மெகாஹெர்ட்ஸ் ஆகிய அலைக்கற்றைகளுக்கு ஏலம் நடத்து வதற்கான வழிகாட்டு நெறிகளை தொலைத்தொடர்புத்துறை வெளியிடும்.

ஏலம் நடத்த விரும்பும் நிறுவ னங்கள் முன் வைப்புத் தொகையாக (இஎம்டி) ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும். அத்துடன் தாங்களது பரிந்துரையை அளிக்க வேண்டும்.

அலைக்கற்றை ஏலம் கேட்கும் நிறுவனங்கள் அவர்கள் சேவை யளிக்க விரும்பும் பகுதி குறித்த தகவலை வெளியிடுவதன் மூலம் ஏலத்தில் பங்கேற்கலாம்.

ஒரு குறிப்பிட்ட தொலைத் தொடர்பு வட்டத்துக்கு அலைக்கற்றை ஏலம் எடுக்க விரும்பும் நிறுவனங்கள் அந்தப் பகுதிக் கான ஏலத் தொகையை பல்வேறு காரணிகள் மூலம் இறுதி செய்யப்படும். சேவை பகுதி யின் பன்முக விலை மற்றும் ஒட்டுமொத்தமாக அளிக்கவிரும்பும் சேவை ஆகியவற்றின் சராசரி அடிப்படையில் கணக்கிடப் பட்டு அதன்பிறகு ஏலம் நிறை வடைந்ததாகக் கருதப்படும்.

மின்னணு முறையில் ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பாக தொலைத் தொடர்புத்துறை இது குறித்த கருத்தரங்கை அக்டோபர் 27-ம் தேதி நடத்த உள்ளது. அதில் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைக்கற்றை ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொலைத்தொடர்புத்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மின்னணு முறையில் ஏலம் நடத்துவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்து அந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்துவதற்கு தகுதியானதுதானா என்பதை ஆராயும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை இறுதி செய்யும்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஏலத்தில் நிரந்தர தொகையாக ரூ. 5 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் ஏலதாரர்கள் கேட்கும் விலை அடிப்படையில் அது நிர்ணயிக்கப்பட்டது.

2010-ம் ஆண்டு 3 ஜி மற்றும் பிடபிள்யூஏ ஏலம் நடத்தப்பட்டதில் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஏலத்தை என்.எம்.ரோத்ஸைல்ட் அண்ட் சன்ஸ் நிறுவனம் நடத்தியது. 2012-ம் ஆண்டு டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட் நிறுவனத்தை தொலைத் தொடர்புத் துறை இறுதி செய்தது.

மாற்றத்தகுந்த விலை நிர்ணயம் ஏதும் இல்லாமல் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் ஏலம் நடத்துவதற்கு ரூ. 5 கோடியை கட்டணமாகக் கேட்டது. 2012-ம் ஆண்டு இந்நிறுவனம் நடத்திய ஏலம் மூலம் ரூ. 9,100 கோடி வருமானம் கிடைத்தது. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்திய ஏலம் மூலம் ரூ. 3,600 கோடியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்திய ஏலம் மூலம் ரூ. 62,162 கோடி கிடைத்தது.

கடந்த பிப்ரவரியில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரேடியோ அலைக்கற்றையை அதிக ஏலத்துக்கு ஏலம் கேட்டன. இதனால் வருமானம் 100 சதவீதம் அதிகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x