

நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் செலவுகளை குறைப்பதற்கு 700 நபர்கள் வரைக்கும் பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது. சிறப்பாக செயல்படாத பணியாளர்களை தாங்களாகவே வெளியேறுவது அல்லது பணி நீக்கம் செய்திருக்கிறது இந்த நிறுவனம். செயல்படாத சுமார் 1,000 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் உதவும் என்று இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் கூறினர்.
மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 1 முதல் 2 சதவீதம் ஆகும். பிளிப்கார்ட் தன்னுடைய பிஸினஸ் மாடலை கடந்த சில காலமாக மாற்றி வருகிறது. தவிர இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பை கடந்த சில முறையாக குறைத்து வருகின்றனர்.
இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, சிறப்பாக செயல்படாத பணியாளர் மீது நடவடிக்கை எடுத்தாகவும், ஆனால் எவ்வளவு நபர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்ததாகவும் கூறினார்.
மேலும், சிறப்பாக செயல்படாத பணியாளர்களுக்கு, அவர்களின் பணித்திறமையை மேம்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகும் செயல்படாத பணியாளர்கள் நிறுவனத்துக்கு வெளியே வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும். தவிர பிளிப்கார்ட் மட்டும் இதனை செய்யவில்லை, சந்தையில் அனைத்து நிறுவனங்களும் கடைபிடிப்பதுதான். இ-காமர்ஸ் நிறுவனங்களில் இது வழக்கமான நடைமுறைதான். மேலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வுகளும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.