Published : 18 Sep 2013 04:37 PM
Last Updated : 18 Sep 2013 04:37 PM

நகைக்கடன்: ஆர்பிஐ கட்டுப்பாடு

தங்க நகை மீது கடன் வழங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ளது.

தங்க நகை மதிப்பீடுகளை தரப்படுத்துவதற்கும் கடன் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை நீடிப்பதற்கும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 22 கேரட் தங்க நகைக்கு கடன் வழங்கும்போது 30 நாள்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த விலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப கடன் வழங்க வேண்டும். இப்போது தங்க நகையை மதிப்பீடு செய்வதில் எந்தவிதமான முறையும் பின்பற்றப்படுவதில்லை. இனி நகை மீது கடன் வழங்கும்போது அடமானம் வைக்கும் நபரிடம் அவர் வைக்கும் தங்கத்தின் தூய தன்மை குறித்த விவரத்தை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று, நகைக்கடன் வழங்கும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களை (என்பிஎப்சி) ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதன்படி நகையின் தூய்மை அளவுக்கு ஏற்ப அதன் மதிப்பு மற்றும் அதற்கு ஈடாக வழங்கப்படும் கடன் அளவு நிர்ணயிக்கப்படும். அதாவது நகையின் மதிப்பில் 60 சதவீதம் வரை மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5 லட்சத்துக்கு மேலாக நகைக் கடன் வழங்கினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கடன் பெறுவோரின் நிரந்தர கணக்கு அட்டை எண்ணின் (பான்) நகலைக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ரூ. ஒரு லட்சத்துக்கும் மேலான கடன் தொகையைக் காசோலையாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மூன்று நிமிஷங்களில் நகைக்கடன் என சில நிதி நிறுவன ங்கள் விளம்பரம் செய்துள்ளதற்கும் தடை விதித்துள்ளது. இதுபோல வாடிக்கையாளர் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைச் வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தவிர, இதுபோல நகைக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அதிக அளவில் கிளைகள் தொடங்குவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1000 கிளைகள் உள்ள நிறுவனங்கள் புதிதாகக் கிளை தொடங்க வேண்டுமெனில் அதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி இல்லாத இடங்களில் கிளைகள் தொடங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்குக் கடன் வழங்கப்பட்டதோ அதே பகுதியில்தான் நகை ஏலம் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அவ்விதம் ஏலம் விடும்போது நகையின் மதிப்பு 85 சதவீதமாக இருக்க வேண்டும். அதாவது ஏலம் விடப்படும் நாளுக்கு 30 நாள்களுக்கு முன்பு தங்கத்தின் விலை எந்த அளவு இருந்ததோ அதில் 85 சதவீதம்தான் ரிசர்வ் விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x