Last Updated : 03 Jan, 2014 12:51 PM

 

Published : 03 Jan 2014 12:51 PM
Last Updated : 03 Jan 2014 12:51 PM

அமெரிக்க நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு பாதிப்பா?

‘அமெரிக்க ஊக்க நடவடிக்கை குறைப்பு (US tapering) எப்போது ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது’ என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கடந்த ஞாயிறு (டிச 29) அன்று கூறியபோது இந்திய நிதி சந்தை சீராக மூச்சுவிட ஆரம்பித்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற போது இதே ரகுராம் ராஜன், தனது முதல் பணக் கொள்கையை அறிவிப்பதை மூன்று நாட்கள் தள்ளி போட்டார், காரணம், அமெரிக்க மத்திய வங்கி US tapering பற்றிய முடிவை அறிவித்தால் அதற்கு தகுந்தாற்போல் தனது பணக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று காத்திருந்தார். ஜனவரி 1, 2014 முதல் ஆரம்பம் ஆகும் US tapering, எவ்வித பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும்?

2008க்கு பிறகு அமெரிக்க பணக் கொள்கை

2008-ல் ஏற்பட்ட நிதி சிக்கலால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அதே நேரத்தில் அதனின் நிதி நிறுவனங்களையும் சிக்கலில் இருந்து காப்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்காக அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (இனிமேல் The Fed) அதிக பண அளிப்பை ஏற்படுத்தியது. வங்கிகளுக்கிடையே உள்ள ஒரு நாள் கொடுக்கல்-வாங்கல் வட்டி விகிதத்தை (இதனை fed funds rate என்பர்) 0% முதல் 0.25% வரை வைத்துகொள்வது The Fed பணக் கொள்கையின் மைய அம்சம்.

பண அளிப்பு அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். வட்டி விகிதம் குறைவாக இருந்தால் முதலீடு உயர்ந்து பொருளாதாரம் உயரும், வேலையின்மை குறையும் என்பது The Fedயின் பொருளாதாரக் கணக்கு.

ஊக்க நடவடிக்கை (Quantitative Easing - QE)

பண அளிப்பை எப்படி உயர்த்துவது? The Fed, டாலரை அச்சிட்டு வங்கிகளுக்கு கொடுத்து அதற்கு ஈடாக அவர்களிடமிருந்து அரசு கடன் பத்திரங்களையும், மற்ற சொத்துமீதான கடன் பத்திரங்களையும் வாங்கிக் கொள்ளும். இதனால், ஒருபுறம் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் அதிகமாகும், மற்றொரு புறம் நீண்ட கால வட்டி விகிதம் குறையும். இதை தான் Quantitative Easing (இனிமேல் QE) குறிப்பிட்டனர்.

முதல் நிலை QE-I யில் நவம்பர் 25, 2008 தொடங்கி மார்ச் 18, 2010 வரை The Fed பண அளிப்பை அதிகரித்தது. இதற்கு பிறகும் அமெரிக்க பொருளாதாரம் உயரவில்லை, அதே நேரத்தில் ஐரோப்பாவில் புதிய நிதி சிக்கல் உருவாகியது. எனவே, இரண்டாம் நிலை QE-II துவங்கியது. இதில், The Fed $600 பில்லியன் டாலர் அளவுக்கு குறுகிய கால அரசு கடன் பாத்திரங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டு ஜூன் 2011 வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதிலும் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை.

இதற்கிடையில் செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2012 வரை Operation Twist என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. நீண்ட கால வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், அதே நேரத்தில் பண அளிப்பை அதிகரிக்கக் கூடாது என்பது இத்திட்டத்தின் நோக்கம்.

இதன்படி, நீண்ட கால கடன் பத்திரங்களை The Fed வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக குறுகிய கால கடன் பத்திரங்களைக் கொடுத்தது. இதனால் கடன் சந்தையில் நீண்ட காலக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தது.

ஆனால், பண அளிப்பை அதிகரித்து குறுகியகால வட்டி விகிதத்தை நிலை நிறுத்த செப்டம்பர் 2012 முதல் QE-III செயல்படுத்தப்பட்டது.

QE-III செயல்திட்டப்படி The Fed மாதம் தோறும் $85 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை வாங்கி அதற்கு ஈடான பண அளிப்பை ஏற்படுத்தும். இத்திட்டம் அமெரிக்க பொருளாதாரம் 2015 வரை தொடரும் என்றாலும், அமெரிக்க வேலையின்மை 6.5% விட குறையும்போதும், அல்லது பணவீக்கம் 2.5% விட அதிகமாகும்போதும், கடன் வாங்கும் திட்டம் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தது.

US Tapering

இப்போது The Fed கடன் பத்திரங்களை வாங்கும் அளவைக் படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மாதம்தோறும் $85 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை The Fed வாங்குவதாக பார்த்தோம், இனி, ஜனவரி 2014 முதல் $75 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை மட்டுமே The Fed வாங்கும். அதன் பிறகு படிப்படியாக இந்த கடன் பத்திரங்களை வாங்கும் அளவு குறைக்கப்படும். இது தான் US Tapering. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு 2014லில் 2.8% முதல் 3.4% வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாலும், 2013 நவம்பர் மாத வேலையின்மை விகிதம் 7% வரை குறைந்துள்ளதாலும் US Taperingயை The Fed துவங்கியுள்ளது.

ஜனவரி 31, 2014 அன்று The Fed யின் புதிய தலைவராக பதவி ஏற்க உள்ள யேலனுக்கும் இதில் உடன்பாடு உண்டு எனத்தெரிகிறது.

US Tapering - கினால் என்ன நடக்கும்?

அமெரிக்காவில் அமெரிக்க டாலர் அளிப்பை The Fed குறைக்கும், அவ்வாறு குறைத்தால் அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயரும். அதிக வட்டி வரும் என்பதால் எல்லாரும் கடன் கொடுக்க அமெரிக்க நிதி சந்தை நோக்கி செல்வர்.

இது அமெரிக்க டாலரின் தேவையை உயர்த்தும். ஆக, ஒரு புறம் டாலர் வரத்து குறைய, மற்றொரு புறம் டாலர் தேவை அதிகரிக்க, அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் பணங்களின் மதிப்பு குறையும். இது தான் இந்திய ரூபாய்க்கும் நிகழும்.

இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை நமது மொத்த உற்பத்தியில்(ஜிடிபியில்) 3% விட குறைவாக இருக்கும் என்பதாலும், அன்னியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், US Tapering பாதிப்பு குறைவாகவும், குறுகியகாலம் மட்டுமே இருக்கும் என்பதாலும், இதனை பற்றி நாம் பெரிய அளவில் கவலைகொள்ள தேவை இல்லை என RBIயையும், நிதி அமைச்சகமும் தெரிவிக்கின்றன. நம்புவோமாக.

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x