Published : 22 Oct 2013 09:22 PM
Last Updated : 22 Oct 2013 09:22 PM

அரசு வங்கிகளில் கடனைத் திருப்பிச் செலுத்தாத 30 பெரிய நிறுவனங்கள் கண்காணிக்கப்படும்: ப.சிதம்பரம்

பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திரும்பச் செலுத்தாத 30 பெரிய நிறுவனங்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்திக் கொள்வதற்காக அரசு ரூ.14,000 கோடியை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கியது.

டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியது:

பொதுத் துறை வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு கடந்த ஆண்டைவிட இப்போது அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்களில் 30 பெரிய நிறுவனங்களைக் கண்காணித்து, அவற்றிடமிருந்து கடனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாராக் கடன் என்பது பொருளாதாரத்தில் ஓர் அங்கம். பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது வாராக்கடனும் வசூலாகும்.

30 பெரிய நிறுவனங்கள்

ஒவ்வொரு வங்கியிலும் கடன் பெற்ற முக்கியமான முதல் 30 பெரிய நிறுவனங்களின் பட்டியலைத் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிறுவனங்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று தவணையைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களாகும்.

2000-வது ஆண்டு இருந்ததைப் போன்ற மிக மோசமான பொருளாதார சூழல் இப்போது இல்லை. அப்போது வங்கிகளின் நிகர வாராக்கடன் அளவு 14 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து வசூல் நடவடிக்கை மூலமாக வங்கிகளின் வாராக்கடன் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாத நிலவரப்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் அளவு 3.89 சதவீதமாகும். பாரத ஸ்டேட் வங்கிகளின் வாராக்கடன் அளவு 5.50 சதவீதமாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும், பிற வங்கிகளும் ஒருங்கிணைந்து வாராக் கடன் வசூலிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இருப்பினும், வங்கிகளின் கடன் வழங்கும் அளவு முதல் இரண்டு காலாண்டில் திருப்திகரமாக உள்ளது. இதே நிலை நிதி ஆண்டு முழுமைக்கும் தொடரும் என நம்புகிறேன்.

கடனை திரும்பச் செலுத்துவதற்கு போதிய நிதி ஆதாரம் இருந்தும், வேண்டுமென்றே நிலுவையைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் பல உள்ளன. இத்தகைய நிறுவனங்களைக் கண்டறிவதற்காகத்தான் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாராக்கடன் பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களுமே வேண்டுமென்றே நிதியைத் திரும்பச் செலுத்தாமல் அடம்பிடிக்கும் நிறுவனங்கள் என்று அர்த்தமல்ல. சில நிறுவனங்கள் பல்வேறு நிதிச் சிக்கல் காரணமாகவும் பணத்தை திரும்பச் செலுத்தாமல் இருக்கலாம். எனவேதான் நிறுவனங்களைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

வேண்டுமென்றே தவணையைத் திரும்பச் செலுத்தத் தயங்கும் நிறுவனங்கள்தான் பல்வேறு காரணங்களைக் கூறி தவணை வசூலுக்கு முட்டுக் கட்டை போடுகின்றன. முடிந்தவரைக்கும் பழைய வாராக்கடன்களை வாங்குவதற்கு வங்கிகள் முயற்சி செய்ய வேண்டும்

10 ஆயிரம் புதிய கிளைகள்

வீடு கட்டுவதற்கான கடன் வழங்கும் அளவு குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோல கல்விக்கடன் வழங்கும் அளவு உயர்ந்துள்ளது. சிறுபான்மையினருக்கு கடன் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை வங்கிகள் எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் 10 ஆயிரம் புதிய கிளைகளையும், 34,668 தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களையும் (ஏடிஎம்) நிறுவ உள்ளது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதில் அரசு தீவிரமாக உள்ளதால் தங்கக் காசு இறக்குமதி மீதான தடையை விலக்கிக் கொள்ளும் முடிவை அரசு இப்போது எடுக்காது” என்றார் ப.சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x