

அமெரிக்க நிதி அமைச்சர் ஜேகப் லூ-வைச் சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். அக்டோபர் 13-ம் தேதி அவரை சந்திக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அடுத்த மாதம் 9-ம் தேதி சான் பிரான்ஸிஸ்கோ செல்ல உள்ளார் சிதம்பரம். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க செல்லும் சிதம்பரம் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேகப் லூவைச் சந்திக்கிறார். சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை நிலவி வரும் சூழலில் இவர்களது சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவின் பெரு முதலீட்டாளர்களையும் சிதம்பரம் சந்திக்க உள்ளார். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் அன்னிய முதலீடுகளால் அதை ஓரளவு ஈடுகட்ட முடியும் என்ற நோக்கில் முதலீட்டாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார் சிதம்பரம்.