Published : 24 Sep 2013 11:44 AM
Last Updated : 24 Sep 2013 11:44 AM

பொலிவிழக்கும் தங்க நகைக் கடன் தொழில்

இரண்டு நிமிஷங்களில் தங்க நகைக் கடன் பெறலாம். நகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் பெறலாம் என்ற நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் இனி சாத்தியமில்லாமல் போய்விட்டது. கடந்த வாரம் தங்க நகைக் கடன் வழங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்ததே இதற்குக் காரணமாகும். இதனால் நகைக் கடன் வழங்குவதையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) மவுசு இனி படிப்படியாகக் குறையும்.

வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் முன்பாக அவரைப்பற்றிய முழு விவரத்தையும் கேட்டு பதிவு செய்ய வேண்டும். கேஒய்சி எனப்படும் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் படிவ த்தைப் பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

20 கிராமுக்கு மேல் அடமானம் வைத்தால் அதை வைக்கும் வாடிக்கையாளரைப் பற்றி தீவிரமாக பரிசீலித்து அதன்பிறகே கடன் வழங்க வேண்டும். மேலும் ரூ. 5 லட்சத்துக்கு மேல் நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர் கட்டாயம் நிரந்தர கணக்கு அட்டை எண் (பான்) அளிக்க வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதனால் இதுவரை நகைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீதான மோகம் குறையும். அதேசமயம் நகைக்கடன் வழங்கும் வங்கிகளை மக்கள் நாடும் போக்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்பிஎப்சி நிறுவனங்கள் நகைகளுக்கு ஒரு கிராமுக்கு அதிகபட்சம் ரூ. 2,000 வரை கடன் அளிப்பதாக அறிவித்தன. ஆனால் இனி இதுபோல தங்iகள் இஷ்டத்துக்கு தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் விலையை நிர்ணயம் செய்யக் கூடாது. சந்தை மதிப்பில் 30 நாளுக்கு முந்தைய விலையில் 60 சதவீதம் வரை மட்டுமே கடன் அளிக்க வேண்டும் என்று ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் தங்கள் இஷ்டம் போல கடன் வழங்கும் விலையை நிர்ணயிக்க முடியாது.

கேஒய்சி, பான் அட்டை, ஒரு மாதத்துக்கு முந்தைய விலை அடிப்படையிலான நகைக கடன் அளவு, மதிப்பில் 60 சதம்வரைதான் கடன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகள் அனைத்தும் நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களின் புற்றீசல் போன்ற வளர்ச்சியை நிச்சயம் கட்டுப்படுத்தும்.

மேலும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கினால் அதை காசோலையாகத்தான் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் இரண்டு நிமிஷங்களில் கடன் அளிப்பது என்பது எந்த நிறுவனத்துக்கும் சாத்தியமில்லை.

மேலும் நகைக் கடனுக்கு ஆண்டுக்கு 24 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை வட்டியை இந்நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால் நகைக் கடன்வழங்கும் பொதுத்துறை வங்கிகளில் வட்டிக் கடன் 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரைதான். தனியார் வங்கிகளில் இது 17 சதவீதமாக உள்ளது.

நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் நகையை மீட்பதற்கான அதிகபட்ச கால அவகாசம் 18 மாதங்கள்தான். அதன்பிறகு அவை ஏலத்துக்கு வந்துவிடும். ஆனால் வங்கிகளில் 36 மாதம் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இதுவும் வங்கிகளை மக்கள் நாடுவதற்கான காரணமாக அமையும்.

மேலும் வங்கிகள் நிர்ணயிக்கும் நகைக் கடன் அளவு இனி என்பிஎப்சி-க்கள் வரையறுப்பதைக் காட்டிலும் நிச்சயம் கூடுதலாக இருக்கும். மேலும் வங்கிகளில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை நகைக் கடன் பெற முடியும். அத்துடன் தவணை முறையிலும் வட்டி, அசலை அடைப்பதற்கான வசதி வங்கிகளில் உண்டு.

மேலும் நகைக் கடன்வழங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் பரிசீலனைக் கட்டணம், முன்கூட்டியே பணத்தை செலுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x