Published : 02 Nov 2013 11:37 AM
Last Updated : 02 Nov 2013 11:37 AM

ஆன்லைனில் தீபாவளி வியாபாரம் அமோகம்

கடைக்காரர்கள் இந்த ஆண்டு தீபாவளி வர்த்தகம் மந்தம் என குமுறிக் கொண்டிருக்க, ஆன்லைனில் வர்த்தகம் அமோகமாக நடைபெற்றுள்ளது.



கூட்ட நெரிசல், அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல், காருக்கான எரிபொருள் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு மாறியுள்ளதாக அசோசேம் நடத்திய சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

பெருநகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாக அத்தகவல் தெரிவிக்கிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மிக அதிக அளவில் அளிக்கும் சலுகைகள்தான் இதற்கு முக்கியக் காரணம்.

மேலும் பெரு நகரங்களில் குறிப்பாக தில்லி போன்ற நகரங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் ஆகியனவும் ஆன்லைன் வர்த்தக அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும். ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் 1,200 நிறுவனங்களிடம் கருத்து கேட்டதற்கு தங்களது வர்த்தகம் 250 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சண்டீகர், டேராடூன், புணே, மும்பை, ஆமதாபாத், ஹைதராபாத், கொச்சி, சென்னை, உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் நகர்களில் ஆன்லைன் விற்பனை 250 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளியை ஒட்டி பெரும்பாலான பொருள்களுக்கு ஆர்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பரிசுப் பொருள்ள் 58 சதவீதம், எலெக்ட்ரானிக் பொருள்கள் 41 சதவீதம், ஆடைகள் 36 சதவீதம், கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்கள் 33 சதவீதம், வீட்டு உபயோகப் பொருட்கள் 16 சதவீதம், ஜூவல்லரி 15 சதவீதம், அழகு சாதனப் பொருள்கள் 12 சதவீதம், உடற்பயிற்சி பொருள்கள் 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த சில நாள்களில் பெரு நகரங்களில் ஆன்லைன் வர்த்தகம் ரூ. 5 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வீடுகளுக்கே பொருள்கள் சேர்க்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு நேரமும் மிச்சமாகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும் ஆன்லைனில் பொருளைத் தேர்வுசெய்து பதிவு செய்ய முடியும்.

மும்பை நகரில் 55 சதவீத மக்கள் தினசரி ஆன்லைன் மூலமான வர்த்தகத்தையே தேர்வு செய்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 69 சதவீத அளவுக்கு வளர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆன்லைன் மூலமான வர்த்தகத்தில் தொடர்ந்து ஈடுபடுவோர் 18 வயது முதல் 28 வயதுப் பிரிவினரே அதிகம்.

ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் ஆண்களின் எண்ணிக்கை 78 சதவீதமாகவும் பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதமாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x