

பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலைக்கு பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுகிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
ஆண்டுவாரி வளர்ச்சி விகிதம் ஏற்றுக் கொள்ளும்படியாகவே உள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
“பணமதிப்பு நீக்கம் மூலம் புதிய இயல்பை அரசு உருவாக்கியுள்ளது. முந்தைய இயல்பு நிலையான பணப்பொருளாதாரம், நிழல் பொருளாதாரம் ஆகியவற்றை அகற்றுவதில் மிகப்பெரிய அளவில் இந்த நடவடிக்கை முதல்படியாக உள்ளது” என்றார்.
கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக மட்டுமே இருந்தது, இது எதிர்பார்ப்புக்கு இணக்கமான வளர்ச்சியல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறியதையடுத்து அருண் ஜேட்லி இவ்வாறு கூறியுள்ளார், மாறாக அவர் கவனம் முழுதும் 2016-17-க்கான ஜிடிபி 7.1% என்பதில்தான் அடங்கியிருந்தது.
“நடப்பு உலகச்சூழலில் 7-8% வளர்ச்சி விகிதம் என்பது புதிய இயல்பாக உருவாகியுள்ளது, இதனை மோசம் என்று கூற முடியாது.
ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்த அரசு தயாராகி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி வலுசேர்க்கும்.
வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் மிகப்பெரிய சோதனையாகும். இந்தச் சோதனையுடன் இணைந்ததே தனியார் துறை முதலீடும்.
கடந்த 3 ஆண்டுகள் இந்தியாவுக்கு மட்டும் சவால் அல்ல உலகம் முழுதுக்குமே சவால் நிரம்பிய ஆண்டுகளாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சி குன்றியது, வர்த்தகம் சுருங்கியது. மிகப்பெரிய பொருளாதாரங்களில் தற்காப்புக் குரல்களின் சப்தங்கள் ஆகியவற்றோடு புவி அரசியல் நிச்சயமின்மை ஆகியவையும் சேர்ந்து உலகம் முழுதுமே நெருக்கடிகளை கடந்த 3 ஆண்டுகளில் சந்தித்து வந்தது.
இருப்பினும் அரசின் அன்னிய நேரடி முதலீட்டு சீர்த்திருத்தங்கள், 14-ம் நிதிக்கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ஆதார் சட்டங்கள் ஆகியவற்றினால் ஓட்டைகள் அடைக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியை இயற்படச் செய்துள்ளது” என்றார் அருண் ஜேட்லி.