Published : 27 Jan 2017 03:17 PM
Last Updated : 27 Jan 2017 03:17 PM
ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மூலமாக மக்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வங்கிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "ஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையைத் தொடங்க இருக்கிறோம். இதற்காக, மக்கள் போன்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
வியாபாரிகளிடம் தங்கள் ஆதார் எண்ணை அளித்து, பயோமெட்ரிக்ஸ் மூலம் உறுதி அளித்துவிட்டு பணத்தை செலுத்துவதும் பெற்றுக்கொள்வதும் என பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ஆதார் பரிவர்த்தனை திட்டத்தில் இதுவரை 14 வங்கிகள் கைகோத்துள்ளன. இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இதர வங்கிகளிடமும் பேசி வருகிறோம். எனவே, இந்தத் திட்டம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
தற்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 111 கோடி மக்களிடம் ஆதார் எண்கள் உள்ளன. 49 கோடி வங்கிக் கணக்குகள் இதுவரை ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் ஆதார் எண்களுடன் சராசரியாக 2 கோடி வங்கிக் கணக்குகள் இணைக்கப்படுகின்றன" என்றார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் கூட பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடும் வகையில் ஆதார் பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT