Published : 21 Aug 2016 01:20 PM
Last Updated : 21 Aug 2016 01:20 PM
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்தும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவச மாக அளிக்க இருக்கிறது. இந்த முன்னோட்ட சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடை களுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கை யாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தொலைத்தொடர்பு செயலருடன் சந்திப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று முன்தினம் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஜேஎஸ் தீபக்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் ரிலையன்ஸ் ஜியோ செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. மேலும் சோதனை சேவையை தொடங்குவதற்கு தற்போது களத்தில் உள்ளவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை குறித்த அனைத்து செயல் திட்டங்களையும் தொலைத்தொடர்பு துறை செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் முகேஷ் அம்பானியோடு அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் உடன் இருந்துள்ளார்.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ளதாக பதிலளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT