Published : 17 Sep 2018 12:10 PM
Last Updated : 17 Sep 2018 12:10 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் சரிவைச் சந்தித்தன. டாலர் மதிப்பு உயர்வால் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததால் சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன.

கடந்த வாரம், இரண்டு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 976 புள்ளிகள் சரிந்தன. இதனால் இரண்டு நாளில் முதலீட்டாளர்கள் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தனர். அதன் பின் தேக்க நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 366 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 37,724 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து, 11,500 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.

மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்து வருவதாக பங்கு வர்த்தக ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x