Published : 16 Sep 2014 10:43 AM
Last Updated : 16 Sep 2014 10:43 AM

டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்க ஏற்ற தருணம்: அரசுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பரிந்துரை

டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி மானியம் இல்லாமல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் டீசல் விற்பதற்கான நேரம் இதுதான் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தை அரசு படிப்படியாகக் குறைக்க முடிவு செய்து மாதந் தோறும் லிட்டருக்கு 50 காசு உயர்த்தி வந்தது. கடந்த ஓராண்டில் 19 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதில் லிட்டருக்கு ரூ.11.81 உயர்த்தப்பட்டது.

இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டீசல் விலையைக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிக்கி ஏற்பாடு செய்திருந்த வங்கியாளர்கள் மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், கடந்த ஜூன் மாதத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை 14 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு பீப்பாய் விலை 96.38 டாலர் என்ற விலையில் விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைவதால் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவு குறையும். இதனால் பணவீக்கமும் குறையும். இத்தகைய சூழலில் டீசலுக்கு அளிக்கப்படும் மானியத்தை முற்றிலுமாக நீக்கிவிடுவதற்கான நேரமிது.

சர்வதேச சந்தை விலை அடிப்படையில் கணக்கிட்டால் இப்போது லிட்டருக்கு 8 காசுகள்தான் மானியம் அளிக்கும் நிலை உள்ளது. விலை குறையும் போது டீசல் விலையைக் குறைக்க வேண்டியிருக்கும். இதனால் டீசலுக்கு அளிக்கப்படும் மானி யத்தை அரசு முற்றிலுமாக நீக்கி விடுவது குறித்து முடிவெடுக்க இதுவே ஏற்ற தருணம் என்றார்.

ஜன்தன் திட்டம்

மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தை செயல்படுத்துவதில் வங்கிகள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ராஜன் குறிப்பிட்டார். அதிக வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதில் மட்டுமே வங்கிகள் கவனம் செலுத்தக் கூடாது. இதில் உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் இந்தத் திட்டம் எந்த நோக்கத்துக்காக அரசு தொடங்கியுள்ளது என்பதை யும் வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ஒருவருக்கே பல சேமிப்புக் கணக்குகள் தொடங் கப்பட்டால், இத்திட்டத்தின் நோக்கமே வீணாகிவிடும் என்றார். அதேபோல கணக்கு தொடங்கியவர்கள் அதை செயல்படுத்தாமல் போனாலும், வங்கிகள் மீது அதிருப்தி ஏற்பட்டாலும் இத்திட்டத்தின் பலனை எட்ட முடியாது என்றார்.

வளர்ச்சி

சமீபத்தில் வெளியான தொழில் உற்பத்தி குறியீட்டெண் (ஐஐபி) அட்டவணை சரிவைச் சந்தித்த போதிலும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் தேவை என்பதையே உணர்த்துகிறது. மேலும் இப்போது நாம் காணும் வளர்ச்சி சீரற்றதாக உள்ளது என்றும் ராஜன் குறிப்பிட்டார்.

வங்கிகளின் செயல்பாடு

பொதுத்துறை வங்கிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. முடிவுகளை எவ்வித குறுக்கீடும் இன்றி வங்கிகள் எடுப்பதைத்தான் அரசும் விரும்புகிறது. அரசின் சமுக மேம்பாட்டுப் பணியில் வங்கிகள் தங்களை இணைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் அத்தகைய திட்டம் வர்த்தக ரீதியில் சாத்தியமானதுதானா என்பதை வங்கிகள்தான் உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார். வங்கிகளின் செயல்பாடுகளில் அரசு எந்த அளவுக்குத் தலையிடலாம் என்பது குறித்த பி.ஜே. நாயக் குழுவின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x