Published : 11 Sep 2018 12:05 PM
Last Updated : 11 Sep 2018 12:05 PM
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை இன்று 90 ரூபாயை தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் 80 டாலர் என்ற விலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உறுதியளித்தபடி நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் வழங்கவில்லை.
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வெனிசுலா, துருக்கி போன்ற நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடி போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாகும்.
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து 84.05 ரூபாயாக உயர்ந்தது. இதுபோலவே டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து 77.13 ரூபாயாக உயர்ந்தது.
அதேசமயம், மும்பையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.26 ரூபாயாகவும், டீசல் விலை 77.47 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பார்பானி மாவட்டத்தில் தான் இந்தியாவிலேயே அதிகவிலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீலர் கமிஷன் மற்றும் போக்குவரத்து செலவை அடிப்படையாக வைத்து மும்பையை விட கூடுதல் விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
பார்பானியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.02 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதன் முறையாக வரலாற்றில் இல்லாத அளவாக இங்கு 90 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை இன்று, டெல்லியில் 80.91 ரூபாயாகவும், பெங்களூருவில் 83,51 ரூபாயாகவும், கோல்கத்தாவில் 83.75 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT