Published : 31 Mar 2018 08:48 AM
Last Updated : 31 Mar 2018 08:48 AM

வாடிக்கையாளர் தகவலை ஆதாருடன் சரிபார்க்க ஏர்டெலுக்கு மீண்டும் அனுமதி

வாடிக்கையாளர் தகவல்களை ஆதாருடன் ஒப்பிட்டு சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் ஏர்டெல் பேமெண்ட் வங்கி ஆதாரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் தகவல்களை சரிபார்ப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

ஆதார் சட்டப்படி ஒவ்வொரு காலாண்டுக்கும் அறிக்கை சமர்ப்பிப்பதோடு யூஐடிஏஐ கொடுக்கும் வழிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றவேண்டுமென ஏர்டெல் நிறுவனத்துக்கு யூஐடிஏஐ உத்தரவிட்டிருக்கிறது. தீவிரமான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விதிமுறைகளுக்கேற்ப இசைவாக நடந்துகொண்டதாலும், தொடர்ந்து ஆணையத்துக்கு எல்லாத் தகவல்களையும் சரிவர தெரிவித்ததாலும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாக யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் வாடிக்கையாளர்களின் அனுமதி இன்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கி புதிய கணக்குகளை தொடங்கியதாகவும், கோடிக்கணக்கான சமையல் எரிவாயு மானியத்தை வாடிக்கையாளருக்கு தெரியாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும் ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட் வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதார் முறையில் வாடிக்கையாளர் தகவல்களை சரிபார்க்க இரு நிறுவனங்களுக்கும் யூஐடிஏஐ மற்றும் அரசு தடை விதித்தது. பின்னர் குறுகிய காலத்துக்கு ஏர்டெல் நிறுவனத்துக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கெடு காலவரையின்றி ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x