Published : 02 Mar 2018 09:03 AM
Last Updated : 02 Mar 2018 09:03 AM

பிப்ரவரியில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சி

ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனங்களான மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்றவை உள்நாட்டு வாகன விற்பனையில் கடந்த பிப்ரவரியை விட இந்த பிப்ரவரியில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.

மாருதி சுசூகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 14.2 சதவீதமும் , மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் உள்நாட்டு விற்பனை 20 சதவீதமும், டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு விற்பனை 38 சதவீதமும் கடந்த பிப்ரவரியை விட அதிகரித்துள்ளது. ஃபோர்டு இந்தியாவின் மொத்த விற்பனை சிறிய அளவு சரிந்துள்ளது. இருப்பினும் உள்நாட்டு விற்பனையில் கடந்த பிப்ரவரியை விட 8.43 சதவீத அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் உள்நாட்டு விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகியின் சுவிஃப்ட், டிசையர், எஸ்டிலோ, பலீனோ போன்ற கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.வணிக வாகனங்களில் ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலாண்ட் 29 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனையும் வளர்ச்சி கண்டுள்ளது.இருசக்கர வாகன விற்பனையைப் பொறுத்தவரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த பிப்ரவரியை விட 31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

விற்பனை அதிகரிப்பு குறித்து மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் ஆட்டோமொபைல் துறைத் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், தனிநபர் மற்றும் வணிக வாகனங்களுக்கு நீடித்த தேவை இருப்பதால் இந்த அளவு வளர்ச்சி இருக்கிறது என்றார். இந்த வளர்ச்சி மார்ச் மாதமும் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x