Published : 25 Mar 2018 11:09 AM
Last Updated : 25 Mar 2018 11:09 AM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகி இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடியின் மும்பை வீட்டில் இருந்து விலை உயர்ந்த கடிகாரங்கள், ஓவியங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.36 கோடி என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மும்பையில் வொர்லி கடற்கரைப்பகுதியில் நீரவ்மோடிக்கு சொந்தமான சமுத்ரா மஹால் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியுள்ள்ளனர்.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் இணைந்து மும்பையில் வொர்லி கடற்கரைப்பகுதியில் உள்ள நீரவ் மோடியின் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினோம்.
அந்த சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள பழங்கால தங்க நகைகள், ரூ.1.4 கோடி மதிப்புள்ள தங்க,வைர நகைகள், அமிர்தா செர்கில், எம்எப் ஹூசைன், கே.கே. கெப்பர் ஆகியோரின் ரூ.10 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட சொத்துகளில் ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு மட்டும் 10 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே நீரவ் மோடி மீது 2 சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளும், அவரின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெகுல் சோக்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மெகுல் சோக்சி ரூ.1200 கோடி பிஎன்பி வங்கியில் மோசடி செய்துள்ளார்.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற இவர்கள் இருவரையும் கைது செய்ய அமலாக்கத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. மேலும், மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நீரவ் மோடி, மெகுல் சோக்சி இருவருக்கும் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன் நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி 251 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.7,638 கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT