Published : 12 Mar 2018 09:40 AM
Last Updated : 12 Mar 2018 09:40 AM

6 நாளில் ரூ.6,000 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது

மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையான காலகட்டத்தில் ஆறு நாட்கள் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. இந்த ஆறு நாட்களில் ரூ.5,883 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.2,410 கோடியும், இந்திய கடன் சந்தையில் இருந்து ரூ.3,473 கோடியும் வெளியேறி இருக்கிறது. மொத்தம் ரூ.5,883 கோடி வெளியேறி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தைக்கு (பங்குச்சந்தை + கடன் சந்தை) ரூ.11,000 கோடி முதலீடுகள் வந்திருந்த நிலையில், மார்ச் மாதம் ரூ.5,883 கோடி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்னும் எதிர்பார்ப்பு இருப்பதால் டாலருக்கான தேவை உயர்ந்து வருகிறது, இதனால் இந்தியாவில் உள்ள முதலீடுகள் மற்ற நாடுகளுக்கு செல்கிறது என குரோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் கூறினார்.

கடந்த பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி விதிக்கப்பட்டது. இது முதலீட்டு சூழலை பாதித்தது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், மெதுவாக அந்நிய முதலீட்டை பாதிக்கிறது. தவிர பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரம் காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எச்சரிகையுடன் இந்திய சந்தையை அணுகி வருகிறார்கள் என மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா கூறினார். சர்வதேச அளவில் விற்கும் போக்கு இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். இது போன்ற சூழலில் எங்கு ஆபத்து இல்லையோ அங்கு முதலீடுகள் குவிவது வழக்கம்தான் என்றும் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x