Published : 19 Mar 2018 08:39 AM
Last Updated : 19 Mar 2018 08:39 AM

6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.52,000 கோடி சரிவு

சந்தை மதிப்பில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் நிறுவனங்களில் ஆறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.52,000 கோடி அளவுக்கு கடந்த வாரம் சரிந்திருக்கிறது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, ஹெச்யுஎல், ஓஎன்ஜிசி மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்தது.

முதல் பத்து இடங்களில் மீதமுள்ள நிறுவனங்களான ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, மாருதி சுசூகி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.

டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து டாடா சன்ஸ் கணிசமான பங்குகளை விற்றது. இதனால் டிசிஎஸ் பங்கு கடந்த வாரம் சரிந்தது. கடந்த வாரம் மட்டும் ரூ.40,008 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது. இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,316 கோடி அளவுக்கு சரிந்தது. ஹெச்டிஎப்சி சந்தை மதிப்பு ரூ.989 கோடியும், எஸ்பிஐ சந்தை மதிப்பு ரூ.474 கோடியும், ஹெச்யுஎல் சந்தை மதிப்பு ரூ.324 கோடியும் சரிந்து முடிந்தன.

மாறாக, இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு ரூ.1,987 கோடியும், ஐடிசி சந்தை மதிப்பு ரூ.1,577 கோடியும், ஹெச்டிஎப்சி வங்கி சந்தை மதிப்பு ரூ.1,115 கோடியும் மாருதியின் சந்தை மதிப்பு ரூ.782 கோடியும் உயர்ந்து முடிந்தது.

மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு ரூ.8900 கோடி சரிவு

இதேபோல முதல் பத்து இடங்களில் உள்ள மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பும் ரூ.8,900 கோடி அளவுக்கு சரிந்திருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பெரு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்ததே இதற்கு காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் பட்ஜெட்டுக்கு பிறகான மாதத்தில் மந்தம் ஏற்படுவது இப்போதுதான் என ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் சிக்கா தெரிவித்திருக்கிறார்.

முதல் பத்து இடங்களில் உள்ள ஆறு நிறுவனங்கள் கையாளும் தொகை குறைந்திருகிறது. மாறாக கோடக், ஆக்ஸிஸ், ரிலையன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ ஆகிய நிறுவனங்கள் கையாளும் தொகை உயர்ந்திருக்கிறது.

10 நிறுவனங்கள் கையாளும் தொகை கடந்த ஜனவரியில் ரூ.18.77 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் பிப்ரவரியில் ரூ.8,900 கோடி குறைந்து ரூ.18.68 லட்சம் கோடியாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 42 நிறுவனங்கள் கையாளும் தொகை ஜனவரி இறுதியில் ரூ.22.41 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை அதிகபட்ச தொகை இதுவாகும். பிப்ரவரி மாத முடிவில் ரூ.22.2 லட்சம் கோடியாக சரிந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x