Published : 17 Apr 2019 04:39 PM
Last Updated : 17 Apr 2019 04:39 PM

‘‘டைட்டன் வாட்ச் மட்டும் தானா?  - பொன் விழா கொண்டாட்டத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் ஏமாற்றம்

டிசிஎஸின் பொன் விழா கொண்டாடப்படும் நிலையில் பெரிய பரிசுகள், போனஸ் வழங்காமல் வெறும் கைகடிகாரம் மட்டும் வழங்கப்பட்டதால் அதன் ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடாடுகிறது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி பொன் விழா கொண்டாடப்பட்ட நிலையில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் டிசிஎஸ் ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஐடி துறையில் அதிக சம்பவம் தரும் நிறுவனம் என பெயர் பெற்ற டிசிஎஸ், இந்த தருணத்தில் பெரிய அளவில் பரிசுப் பொருட்கள், போனஸ் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் இருந்தது.

நகை, வீடு, கார் அல்லது டாடா நிறுவன தயாரிப்புகள் போன்றவை பொன்விழா கொண்டாட்ட பரிசாகக் கிடைக்கும் என்று ஊழியர்கள் கற்பனையில் இருந்தனர். ஆனால் டிசிஎஸ் ஊழியர்களுக்கு பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி வெறும் டைட்டன் கைகடிகாரம் மட்டுமே வழங்கப்பட்டது.

பொன்விழா குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அனுப்பிய இமெயில் செய்தியில் ‘‘டிசிஎஸின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக உங்களுக்கு ஒரு நினைவு பரிசை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தக் கடிகாரம் உங்கள் கைகளில் இருக்கும்போது நமது பயணம் குறித்து நினைவூட்டும், மேலும் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

இதனால், தங்களுக்கு பெரும் பரிசுகள் கிடைக்கும் என காத்திருந்த டிசிஎஸ் ஊழியர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.  

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சில ஊழியர்கள் கூறுகையில் ‘‘நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 50 ஆண்டு பொன் விழாவை கொண்டாடுவது மிகப்பெரிய சாதனை.

இந்தியாவின் நம்பர் 1 இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் ஏமாற்றிவிட்டது. போனஸ் கொடுக்கவிட்டாலும் வேறு நல்ல பரிசு பொருட்களாவது கொடுத்து இருக்கலாம். டாடா நிறுவனத்தின் பொருளாக இருக்க வேண்டும் என்றால் டாடா தங்க நிறுவனத்தின் பரிசு பொருளை தரக்கூடாதா?’’ என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x