Published : 12 Mar 2019 11:27 AM
Last Updated : 12 Mar 2019 11:27 AM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி குற்ற வழக்கின் பின்னணியில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதிவுசெய்துள்ள குற்றப்பத்திரிகையுடன் இணைப்பாக நீரவ் மோடி மற்றும் சிலர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குக்கு வலு சேர்க்கும் வகையிலான ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றப்பத்திரிகையில் என்ன விவரம் சேர்க்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. டெலிகிராப் பத்திரிகை நீரவ் மோடி லண்டனில் வசிப்பதாகவும், அங்கு வைர வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கலாம் என்றும், முன்பிருந்ததைவிட சற்ற பருமனான தோற்றத்துடன் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.
அவரது சொகுசு பங்களா மற்றும் கடை ஆகியவற்றை டெலிகிராப் செய்தியாளர்கள் கண்டுபிடித்து அவருடன் எடுத்த பேட்டியும் பிரசுரமானது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கூறாமல் அவர் காரில் ஏறிச் சென்ற வீடியோ காட்சிகளும் வெளியாயின. இந்தச் செய்தி வெளியான சூழலில் தற்போது கூடுதல் இணைப்பாக மேலும் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
முதல் குற்றப்பத்திரிகை
நீரவ் மோடி மீதான முதலாவது குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு மே 9-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத் துறை மற்றும் மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகிய இரண்டும் சேர்ந்து நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மும்பையில் பிராடி ஹவுஸ் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரையில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 1,873.08 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT