Published : 06 Jan 2019 12:34 PM
Last Updated : 06 Jan 2019 12:34 PM
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து, வங்கி ஊழியர் சங்கங்களில் ஒரு பிரிவினர் வரும் 8,9 தேதிகளில் நாடுமுழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராகவும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, அலாகாபாத் வங்கி ஆகிய வங்கிகள், மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. அதில் “ அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், வங்கிச்சேவை பாதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 21, 26-ஆம் தேதி இரு நாட்களில் 9 வங்கி சங்கங்கள், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கோடிக்கணக்கிலான வங்கிப்பரிவரித்தனை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் வங்கி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப், எஸ்இடபிள்யுஏ ஆகிய சங்கங்கள் பங்கேற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT