Published : 04 Jan 2019 09:16 AM
Last Updated : 04 Jan 2019 09:16 AM

மக்களவை தேர்தலில் விவசாயிகளை கவர ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா பயிர் கடன்: ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நேரடி மானியம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரவு வைப்பது, ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் விவசாயி களின் வாக்குகளைக் கவருவதற் காக இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் மக்கள வைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதேநேரம், விவசாயிகள் பல் வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாக பரவலாக கருதப்படுகிறது.

எனவே, வரும் மக்களவைத் தேர் தலில் ஆட்சியை தக்க வைப்பதற்காக, விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய திட்டங்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக செயல்படுத்துவது குறித்து ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் ஆகியவை தீவிர மாக பரிசீலித்து வருகின்றன. வேளாண்மை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வரு கிறது. விவசாய சங்க பிரதிநிதிகளை பிரதமர் மோடியும் சந்தித்து பேசி வருகிறார். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி அளித்த பேட்டியில், பயிர் கடன் தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை என திட்ட வட்டமாக தெரிவித்தார். கடன் தள்ளு படி என்பது வீணான நடவடிக்கை என்று தெரிவித்த மோடி, விவசாயி களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, ஒரு பருவத்துக்கு பயிர் செலவுக்காக ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனத் தெரிகிறது. இது தவிர, ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்ச மாக ரூ.1 லட்சம் வரை வங்கிகள் மூலம் வட்டியில்லா பயிர் கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வங்கிகளில் பெறும் பயிர் கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் இப்போது 4 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டால், விவசாயி களுக்கு உரம் உள்ளிட்ட சில இடு பொருட்களுக்கு மறைமுகமாக வழங்கப்பட்டு வரும் மானியங்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரி கிறது. குறிப்பாக, மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை உர மானியமாக வழங்கி வருகிறது. இந்தத் தொகை விவசாயிகள் சார்பில் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2.3 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் 70:30 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனத் தெரிகிறது.மத்திய அரசு தீவிர பரிசீலனை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x