Published : 24 Dec 2018 11:10 AM
Last Updated : 24 Dec 2018 11:10 AM

வறுமையைக் குறைப்பதில் தமிழகம் உட்பட 6 மாநிலங்கள் முன்னிலை: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்

ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நீடித்த வளர்ச் சிக்கான இலக்குகள் அறிக்கையின்படி, உச்ச கட்ட வறுமையைக் குறைப்பதில் தமிழ்நாடு, மிசோரம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரா, கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் முன்னிலையில் உள்ளன.

உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை 17 சர்வதேச இலக்கு களையும், அதில் 169 பிரிவுகளையும் நிர்ணயித் துள்ளது. வறுமையை ஒழிப்பது, சுகாதாரம், பாலின ஒற்றுமை, தூய்மையான, மலிவான ஆற்றல், வாழ்வாதாரம் ஆகியவை இதில் முக்கியமானவை. 2016-ல் அமல்படுத்தப்பட்ட இந்த இலக்குகள் 2030-ல் எட்டப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐநாவின் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து நிதி ஆயோக் அமைப்பு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வறுமையைக் குறைப்பதில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வறுமையைக் குறைப்பதில் தீவிரம் காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசி மற்றும் ஊட்டசத்து குறைபாடு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கோவா, மணிப்பூர் மற்றும் கேரளா முன்னிலையில் உள்ளன. இந்தப் பிரிவில், சட்டீஸ்கர், ஒடிசா, மகாராஷ்ட்ரா உட்பட சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தீவிரமாக இருப்பதாகக் கூறியுள்ளது.

நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளில் 13-ல் ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் செயல்படுகின்றன. அஸ்ஸாம், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த விஷயங்களில் மோசமாக செயல்படுவதாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

பல்வேறு இலக்குகள் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாததால் அவற்றை குறித்து ஆராய்ந்து தரப்புள்ளிகள் தருவது கடினமானதாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், ஐநா நிர்ணயித்துள்ள அனைத்து இலக்குகளிலும் முன்னணியில் இருக்கும் மாநிலம் இந்தியாவில் ஒன்று கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x