Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 280 லட்சம் கோடி தேவை என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குத் தேவைப்படும் முதலீடு குறித்து சிஐஐ நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு அளவைக் காட்டிலும் இரு மடங்கு தேவைப்படுவதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ. 139 லட்சம் கோடியாகும்.
பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் முதலீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு எந்தெந்த துறைகளில் முதலீடு தேவை என்பதையும் தீவிரமாக ஆய்ந்தது. இந்த முதலீடுகளைத் திரட்டுதவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதை உரிய காலத்தில் திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்த அளவுக்கு முதலீடு களைத் திரட்ட உரிய கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். உற்பத்தித் துறையில் மட்டும் ரூ. 98,00,000 கோடி தேவைப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தத் துறையில் மட்டுமே அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சேவைத் துறையில் சராசரியாக ஆண்டுக்கு 8 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிட்ட பானர்ஜி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கு முதலீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். வேளாண் துறையில் 4 சதவீத வளர்ச்சி எட்டப்பட வேண்டும். இந்த அளவு வளர்ச்சி எட்டப்பட வேண்டுமாயின் ரூ. 36,00,000 கோடி தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேளாண் துறையில் இந்த அளவுக்கு முதலீட்டை ஈர்ப்பது கடினமாயினும் பொருளா தாரத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேளாண் துறை முதலீடு அவசியம் என்று சிஐஐ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
கட்டமைப்புத் துறையில் 50,000 கோடி டாலர் அளவுக்கு முதலீடு தேவைப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT