Published : 22 Dec 2018 09:10 AM
Last Updated : 22 Dec 2018 09:10 AM
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 689 புள்ளிகள் சரிவு கண்டது.
வாரத்தின் இறுதி வர்த்தக தினமான நேற்று பங்கு வர்த்தகம் சரிவிலேயே தொடங்கியது. இந்தநிலை வர்த்தக நேர இறுதி வரையில் நீடித்தது. சர்வதேச பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து மீண்டுள்ளது, அமெரிக்க மத்திய வங்கி (பெடரல்) வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது மற்றும் லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்றது ஆகிய காரணங்களால் பங்கு சந்தை சுணக்கம் கண்டது.
மும்பை பங்குச்சந்தையில் நிதிமற்றும் வங்கி துறையின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 19 துறை நிறுவனப்பங்குகளின் விலையும் சரிவடைந்தே காணப்பட்டது.
நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு50 பைசா குறைந்து ரூ.70.23க்கு வர்த்தகமாகியது. இது நேற்றுமுன்தினம் ரூ.69.70 ஆக இருந்தது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 689.60 புள்ளிகள் குறைந்து 35,742.07 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 36,483.49 புள்ளிகளும், குறைந்தபட்சமாக 35694.74 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 197.70 புள்ளிகள் சரிந்து 10,754 புள்ளிகளில் நிலை பெற்றது.
பொதுவாக ஆண்டுதோறும் கடைசி வாரங்களில் பெரும் பாலானபங்குச் சந்தைகள் சரிவையே சந்திக்கும். இதற்குக் காரணம்கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெருமளவில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இதனால் புத்தாண்டுக்குப் பிறகுதான் பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT