Published : 22 Nov 2018 11:11 AM
Last Updated : 22 Nov 2018 11:11 AM
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பாதிக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளது. நிதி செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கும் என்று தொழில்துறை அமைப்பான ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (CATMi) கூறியுள்ளது. இதனால் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் சுமார் 2.38 லட்சம் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மூடப்பட வாய்ப்புள்ளது. பணப் பரிவர்த்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இந்த நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக பல ஆயிரம் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
நிதிச் சேவைகளில் வங்கிகளும், அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் ஏடிஎம் இயந்திரங்களின் பயன்பாடு குறையும். இதனால் வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த செலவுகளைக் குறைப்பதற்காக ஏடிஎம் மையங்கள் மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் சுமார் 1.13 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும். இதில் சுமார் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவை வெளியில் இயங்குபவை. சுமார் 15000 ஏடிஎம்கள் வங்கியல்லாத நிறுவனங்களின் ஏடிஎம் களாகும்.
குறிப்பாக பெரும்பாலான ஏடிஎம்கள் புற நகர்களில் இருப்பவையாகும். இந்த நடவடிக்கைகளினால் அரசின் மானியத் தொகையை ஏடிஎம்களில் எடுத்து வருபவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிதிச் சேவை நடவடிக்கைகளில் அரசு மேற்கொண்டுவரும் மாற்றங்கள் காரணமாக ஏடிஎம் மூடும் நடவடிக்கைகள் இருக்கும். குறிப்பாக மென்பொருட்களில் நிகழும் மாற்றங்கள், பணப் பரிமாற்றங்களில் நிகழும் மாற்றங்கள், ஸ்வைப்பிங் இயந்திரங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏடிஎம்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பதற்காக அதிக செலவிட வேண்டியிருப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இந்த சூழலை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT