

மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் நியமிக்கப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் பொருளாதார அறிஞரான இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டால், இந்திய அரசுக்கு வலுசேர்க்கும் சர்வதேச அளவில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் இரண்டாவது பொருளாதார அறிஞராவார் அர்விந்த் சுப்ரமணியன். தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜன் முன்பு சர்வதேச செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
இந்தியாவுக்கு ரகுராம் ராஜன் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்மை பொருளாதார ஆலோசகர் பொறுப்புக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன்மை பொருளாதார ஆலோசகர் பதவி காலியாகவே உள்ளது.
அந்தப் பதவிக்கு அர்விந்த் சுப்ரமணியத்தின் பெயரை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பரிந்துரை செய்தார் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவை விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரம், ஐஐஎம் ஆமதாபாத்தில் நிர்வாகப்படிப்பு படித்தவர். இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பில். மற்றும் டி.பில் படித்தவர்.
அமெரிக்காவில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பேராசிரியராக இருக்கிறார். முக்கியமான பொருளாதார பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரை எழுதிவருகிறார். எக்ளிப்ஸ் Eclipse மற்றும் India’s Turn என்ற இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.