Published : 01 Nov 2018 10:23 AM
Last Updated : 01 Nov 2018 10:23 AM
தீபாவளி பரிசாக சென்னை - மதுரை துராந்தோ ரயில் உட்பட பல்வேறு ரயில்களில் தற்போது அமலில் உள்ள ‘பிளெக்ஸி பேர்’ கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ரயில்களில் இந்த கட்டண முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
ரயில்வேத்துறை, 2016-ம் ஆண்டு முக்கியமான ரயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. ராஜதானி , துரந்தோ, சதாப்தி ரயில்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த ரயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, 50 சதவீதம் வரை கட்டணம் உயர்வு இருக்கும். முதல் வகுப்பு ஏசி உள்ளிட்ட சில வகுப்புகளுக்கு இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், பிளெக்ஸி பேர் கட்டணத்தை குறைத்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 15 பிரீமியம் ரயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 32 ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சிறப்பு கட்டணம் ரத்து செய்து ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 101 ரயில்களில் சிறப்பு கட்டணம், அடிப்படை கட்டணத்தில் 1.5 சதவீதத்துக்கு பதிலாக 1.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், படுக்கைகள் 50 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பும் 15 ரயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பயணிகள் பயன் பெறும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT