Published : 09 Oct 2018 11:15 AM
Last Updated : 09 Oct 2018 11:15 AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் 2019-ம் ஆண்டு 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் எனவும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்எல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் சற்று பின் தங்கி இருந்தாலும், அந்நாட்டுடன் போட்டியிட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட இந்திய பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019-ம் ஆண்டில் 1.2 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2017-ம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது, 7.3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் வரிவருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுவாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதுபோலவே சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் மூலம் வாராக்கடன்களை வேகமாக வசூல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதே வேகம் தொடர்ந்தால், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். அதேசமயம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஐஎம்எப் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT