Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

சிபிஐ விசாரணை: ஐடிபிஐ வங்கி பங்கு 2% சரிவு

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் கட்ட விசாரணையை ஐடிபிஐ வங்கியில் நடத்தியது. இதனால் இந்த வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 2 சதவீத அளவுக்குச் சரிந்தது.

ஐடிபிஐ வங்கி ரூ. 950 கோடியை கடனாக கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு அளித்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத நிலையில் அந்த நிறுவனத்துக்கு ரூ. 950 கோடி கடன் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்று சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை சனிக்கிழமை நடத்தினர்.

இதனால் மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை ஐடிபிஐ வங்கிப் பங்குகள் வர்த்தகம் முடிவில் 2.41 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 81.10-க்கு விற்பனையானது. காலையில் இது 5.47 சதவீத அளவுக்கு சரிந்து ரூ. 78.55 என்ற நிலையில் விற்பனையானது.

ஐடிபிஐ வங்கி, வெளி நிறுவனத்துக்கு மிகப் பெரும் தொகையை கடனாக வழங்கியது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே வங்கிகள் பெருமளவு கடனை அளித்துவிட்டு திரும்பப் பெற முடியாமல் தத்தளிக்கும் நிலையில், இத்தொகை எவ்விதம் அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.கிங்ஃபிஷர் நிறுவனம் நலி வடைந்ததால் கடந்த 2012 அக்டோபர் மாதம் முதல் செயல்படவில்லை.

பங்குச் சந்தையில் ஏற்றம்

பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 190 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 25519 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தையில் 57 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 7625 புள்ளியைத் தொட்டது.

ஆட்டோமொபைல் நிறுவனப் பங்கு விலைகள் அதிக லாபம் ஈட்டின. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்கு அதிகபட்சமாக 6.45 சதவீதம் உயர்ந்தது. பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்பதால் டிராக்டர் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 3.33 சதவீதமும், மாருதி சுஸுகி 1.77 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 0.80 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 0.37 சதவீதமும் உயர்ந்தது.

இவை தவிர ஹெச்டிஎப்சி, இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டியூப்ரோ, சீசா ஸ்டெர்லைட், ஆக்ஸிஸ் வங்கிப் பங்குகளை வாங்குவதிலும் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் இந்நிறுவனப் பங்கு விலைகளும் உயர்ந்திருந்தன.

ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைக்கான வழிகாட் டுதலுக்கு செபி ஒப்புதல் அளித்ததால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களான ஆனந்த் ராஜ், ஹெச்டிஐஎல், பர்சாவந்த், புரவன்கரா, யுனிடெக், டிஎல்எப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் கணிசமாக உயர்ந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 503 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 18 நிறுவனப் பங்குகளின் விலைகள் ஏற்றம் பெற்றன.

கெயில் இந்தியா நிறுவனப் பங்கு விலை 4.34 சதவீதம் சரிந்தது. டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் 2.19 சதவீதம், என்டிபிசி 1.59 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 0.82 சதவீதமும் சரிந்தன.

மொத்தம் 1,728 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,205 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 1,986 கோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x