Published : 19 Aug 2014 10:00 AM
Last Updated : 19 Aug 2014 10:00 AM

நிறுவனங்களை மதிப்பிட்டு வாங்குவது எப்படி?

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் 5.44 பில்லி யன் யூரோக்கள் (சுமார் 44,666 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கினார்கள். மிந்த்ரா (myntra.com) நிறுவனத்தை, பிளிப்கார்ட் (Flipkart.com) நிறுவனம் 1,740 கோடி ரூபாய்களுக்கு வாங்கினார்கள்.

சன் பார்மா நிறுவனம், சக மருந்து தயாரிப்பாளரான ரான்பாக்ஸி கம்பெனியை 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 19,200 கோடி ரூபாய்களுக்கு) வாங்கினார்கள். கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்துக் கம்பெனிகள் ஏன் இணைகிறார்கள்? பல காரணங்கள். உதாரணமாகச் சில:

புதிய துறையில் நுழைதல்

நோக்கியா கம்பெனி செல்போன் துறையில் மக்கள் அபிமானம் பெற்ற பிராண்ட். மைக்ரோசாஃப்ட் தானாகவே புதிய செல்போன் பிராண்ட் அறிமுகம் செய்தால், கணிசமான மார்க்கெட் பிடிக்கப் பல ஆண்டுகளாகும். நோக்கியா மூலமாக, அந்த வளர்ச்சியை மைக்ரோசாஃப்ட் விரைவில் பெற முடியும்.

மார்க்கெட் விரிவாக்கம்

பிளிப்கார்ட், ஈ காமர்ஸில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடைகள் என விரிவான தயாரிப்புப் பொருள்கள் தருகிறார்கள். மிந்த்ரா, ஆடைகள், ஷூக்கள் ஆகிய பொருள் களின் விற்பனையில் முன்னணி நிறுவனமாகும். இத்துடன் இணைவதன் மூலம், பிளிப்கார்ட்டுக்கு மிந்த்ராவின் வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். அத்தோடு, தன் தற்போதைய வாடிக் கையாளர்களிடமிருந்து ஆடைக ளுக்கான அதிக பிஸினஸும் கிடைக்கும்.

இரண்டு கைகள் நான்கானால்...

சன் பார்மா நிறுவனம், ரான்பாக்ஸி இருவரும் பெரிய மருந்து தயாரிப் பாளர்கள். இவர்களின் இணைப்பு நிறுவனம் உலகின் ஐந்தாவது பெரிய மருந்துக் கம்பெனியாக இருக்கும். மருந்து தயாரிப்பில், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மிக முக்கியமானது. கோடி கோடியாகச் செலவழிக்கவேண்டும், நூற்றுக் கணக்கான ஆராய்ச்சிகளில், ஒரு சில மட்டுமே லாபம் தரும். சன் பார்மா + ரான்பாக்ஸி கூட்டணிக்கு அதிக பணபலமும், அறிவார்ந்த ஆராய்ச் சியாளர்கள் படையும் இருக்கும். புதிய முயற்சிகளில் துணிச்சலாக இறங்க முடியும்.

கம்பெனிகளை வாங்கும், விற்கும் டீல்கள் சாதாரணமானவையல்ல, மிகச் சிக்கலானவை, மாதக் கணக்காக, வருடக் கணக்காக நீடிப்பவை. இரண்டு கம்பெனிகளின் உற்பத்தி, விற்பனை சந்தை, நிதி, மனிதவளம், சிஸ்டம்ஸ், சட்டம் போன்ற பல்துறை உயர் அதிகாரிகளும், ஆலோசகர்களும் மூளைக்கு ஓவர்டைம் கொடுத்துக் கணக்குகள் போடுவார்கள், எதிர்த் தரப்பைத் திருப்திப்படுத்தும் தீர்வுகள் காண முயற்சிப்பார்கள்.

விலையை எப்படி நிர்ணயிப்பது?

சமீபத்திய அனுபவம் ஒன்றை சொல்கிறேன். கணேஷ் கடந்த 30 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் சக்தி ரப்பர்ஸ் என்னும் தொழிற்சாலை நடத்திவருகிறார். லேலண்ட், ரானே, ஹூயுண்டாய், மாருதி போன்ற கார் கம்பெனிகளுக்குத் தொடர்ந்து சப்ளை செய்துவருகிறார். வருட விற்பனை 25 கோடி. வருட லாபம் 3 கோடி.

கணேஷுக்கு இப்போது வயது 67. மகள் திருமணம் முடிந்து அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். மருமகனுக்கு கூகுள் கம்பெனியில் வேலை. மகளும் மருமகனும் இந்தியா திரும்புவதாக இல்லை. கம்பெனியை விற்று, நிம்மதியாக வாழ கணேஷ் முடிவெடுத்துவிட்டார்.

கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஸ்வரண் சிங், சக்தி ரப்பர்ஸ் கம்பெனியை வாங்க ஈடுபாடு காட்டியிருக்கிறார். பேச்சு வார்த்தைகள் தொடங்கிவிட்டன. தன் ஆலோசகர்கள் உதவியோடு கணேஷ், சக்தி ரப்பர்ஸின் விலை மதிப்பைக் கணக்கிட்டார். இதற்கு அவர்கள் பல முறைகளைக் கையாண்டார்கள்.

1. லாப அடிப்படை

கம்பெனியின் வருடாந்தர லாபம் ரூ. 3 கோடி. விற்கும்போது, 10 வருட லாபமாவது கணேஷுக்குக் கிடைக்க வேண்டும். இதன்படி, கம்பெனி மதிப்பு 30 கோடி.

2. சொத்து அடிப்படை

தொழிற்சாலை 7 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. கிரவுண்டுக்கு ரூ. 3 கோடி என்று கணக்குப் போட்டால், நில மதிப்பு ரூ. 21 கோடி. எந்திரங்கள், மூலப் பொருட்கள், வசூலாகவேண்டிய பாக்கிகள் ஆகியவை மொத்தம் ரூ. 25 கோடி. ஆக மொத்தம் கம்பெனி சொத்து ரூ. 46 கோடி. கொடுக்கவேண்டிய கடன்கள் 5 கோடி. சொத்திலிருந்து கடன்களைக் கழித்தால், கம்பெனியின் மதிப்பு (46 – 5 ) ரூ. 41 கோடி.

3. புதிய தொழிற்சாலை

அமைக்கும் அடிப்படை கணேஷின் கம்பெனியை வாங்காமல், ஸ்வரண் சிங் அவரே புதிய தொழிற்சாலை போட்டால் அவருக்கு என்ன செலவாகும்?

நிலம் - ரூ. 21 கோடி, எந்திரங்கள் விலை – ரூ. 13 கோடி, மொத்த மூலப் பொருட்கள், தயாரிப்புப் பொருட்கள், தயாராக இருக்கும் பொருட்கள் – ரூ. 3 கோடி, தொழிலாளிகள் தேர்வு, பயிற்சி, உற்பத்தி சீராகும்வரை சம்பளம்- ரூ. 3 கோடி, விற்பனைச் செலவுகள் ரூ. 2 கோடி, பிற சில்லறைச் செலவுகள்- ரூ. 1 கோடி ஆக மொத்தம் - ரூ. 43 கோடி

கணேஷ் தன் மூன்று விதக் கணிப்பீடுகளிலும் கிடைத்த மதிப்பின் சராசரியை எடுத்துக்கொண்டார். அதாவது, 30 + 41 + 43 / 3 = 38 கோடி.

கம்பெனிக்கு நிலம், எந்திரங்கள், மூலப் பொருட்கள், வசூலாகவேண்டிய பணம் ஆகியவை சொத்துக்கள். ஆனால், இவை எல்லவாறையும் விட மிக மிக முக்கியமான சொத்து ஒன்று இருக்கிறது. அதுதான்.

25 வருடங்களாகத் தரமான பொருட்களைத் தயாரித்து, லேலண்ட், ரானே, ஹூயுண்டாய், மாருதி போன்ற கார் கம்பெனிகளுக்குத் தொடந்து சப்ளை செய்து அவர்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் சக்தி ரப்பர்ஸ் கம்பெனியின் வணிக நற்பெயர் (Goodwill) .

கண்ணுக்குத் தெரியாத, ஆனால், ஆண்டாண்டு காலமாக நேர்மையால், உழைப்பால், தரத்தால் தேடிச் சேர்த்த மிக மிக முக்கியமான சொத்து இது. இதை அளக்கமுடியாது, அனுமானிக்கத்தான் முடியும். இந்த வணிக நற்பெயரின் மதிப்பு ரூ. 15 கோடி என்று கணேஷ் கணக்குப் போட்டார். முந்தைய மூன்று விதக் கணிப்பீடுகளிலும் கிடைத்த சராசரி மதிப்பு ரூ. 38 கோடி. வணிக நற்பெயரின் மதிப்பையும் கூட்டினால், சக்தி ரப்பர்ஸின் மதிப்பு மொத்தம் 38 + 15 = ரூ. 53 கோடி.

கணேஷ், ஸ்வரண் சிங்கிடம் ரூ. 53 கோடி கேட்டார். அவர் மறுத்தார். அவர் வாதம் இதுதான் – கம்பெனி சொத்துக்கள், வணிக நற்பெயர் எல்லாம் எதற்காக? தரமான பொருட்கள் தயாரிக்க, விற்க, லாபம் பார்க்க. எனவே, லாப அடிப்படையிலான விலை மட்டுமே தர்க்கரீதியாக ஒத்துக்கொள்ளக்கூடியது. நான் ரூ. 30 கோடிக்கு மேல் ஒரு ரூபாய்கூடத் தரமாட்டேன் என்கிறார்.

பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடக்கின்றன. ரூ. 40 கோடியிலிருந்து ரூ. 45 கோடிக்குள் டீல் முடியும் என்று தோன்றுகிறது.

தனியார் கம்பெனிகளுக்குள் கணேஷும், ஸ்வரண் சிங்கும் முடிவெடுக் கலாம். ஆனால், இதுவே, பொதுமக்கள் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகள் என்றால், கட்டுப்பாட்டு அமைப்பான SEBI என்னும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (Securities and Exchange Board of India) அனுமதி பெற வேண்டும்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x