

பூசன்: தென்கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 10% குறைப்பதாக ட்ரம்ப் உடனடியாக அறிவித்தார்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களது பேச்சுவார்த்தை மகத்தான வெற்றியாகவும் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரி 10% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 57 சதவீதமாக இருந்த வரிவிதிப்பு தற்போது 47 சதவீதமாக குறையும். அதேநேரம், சீனாவும் அரிய வகை மண் தாதுக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டதுடன், அமெரிக்காவின் சோயாபீன்களை வாங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல உள்ளேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வர உள்ளார். தைவான் விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அதிகம் பேசினோம். இந்த விவகாரத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம். மிகவும் மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது பற்றி என்விடியா நிறுவன அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். சீனாவுடன் மிக விரைவில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதில் எங்களுக்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
இந்த சந்திப்பின்போது வர்த்தக பதற்றங்களை தணிக்க உதவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிக்டாக் உரிமை குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. டிக்டாக் தொடர்பான பிரச்சினைகளை முறையாக தீர்க்க அமெரிக்காவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.